Tamilnadu

“அண்ணாமலை தூண்டுதலின் பெயரில் ஆபாச வீடியோக்களை அனுப்பும் பாஜகவினர்” - வீரலட்சுமி பரபர புகார் !

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மாநில மகளிர் அணி பொருளாளர் மாலினி ஜெயச்சந்திரன் ஆகியோரின் தூண்டுதலின் பெயரில் பாஜகவினர் தனக்கு மிரட்டல் விடுப்பதாகவும், ஆபாச வீடியோக்களை தொடர்ந்து அனுப்புவதாகவும் தமிழர் முன்னேற்றப்படை கட்சியின் நிறுவனத் தலைவர் வீரலட்சுமி சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, “பாஜக மாநில மகளிர் அணி பொருளாளர் மாலினி ஜெயச்சந்திரன் என்பவர் பல்வேறு ஊர்களில் பல்லாயிரம் கோடிகளுக்கு சொத்துகளை வாங்கி கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதாக பொதுமக்கள் என்னை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் கடந்த 6 மாதங்களாக நாங்கள் சம்பந்தப்பட்ட சொத்துகளை தேடி சுமார் ரூ.1500 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதை கண்டறிந்தோம்.

இந்த சொத்துகள் குறித்து 5 முறை வருமானவரித்துறை இயக்குநர் அலுவலகத்தில் புகார் மனு அளித்து வெவ்வேறு தேதிகளில் இவர்கள் பெயரில் உள்ள சொத்து பத்திரங்களையும் ஒப்படைத்தோம். மேலும் ரூ.3 ஆயிரம் கோடி அளவிற்கு சொத்துகள் இருப்பதும் தெரியவந்தது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு சாதாரண LIC ஏஜென்டாக இருந்த ஒரு பெண்ணுக்கு தற்போது எப்படி இவ்வளவு சொத்து வந்தது? இந்த விவகாரத்தை நான் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்ததால், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தூண்டுதலின் பெயரில் பாஜகவினர் என்னை தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி வருகின்றனர். தற்போது வரை 15-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை தொடர்ந்து அனுப்பி மன உளைச்சலுக்கு உண்டாக்குவது மட்டுமில்லாமல், தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து மிரட்டியும் வருகின்றனர்.

நான் தொடர்ந்து புகார் கொடுத்து வரும் நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இது குறித்து ஏன் கண்டுகொள்ளவில்லை? பாஜக-விற்கும் அந்தப் பெண்ணுக்கும் சம்மந்தமில்லை என்றால், ஏன் அவரை கட்சியிலிருந்து நீக்கவில்லை?

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ஐபிஎஸ் மூளையை பயன்படுத்தி யார் யார் ரௌடிகளாக இருந்து பல்லாயிரம் கோடி சொத்துகளை சேர்க்கிறார்களோ அவர்கள் மீது அமலாக்கத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையை ஏவி விட்டு அவர்களை கட்சியில் சேர்க்கிறார். இந்தியாவில் அமலாக்கத்துறையை பயன்படுத்தி மக்களை அச்சுறுத்தும் ஒரே கட்சி என்றால் அது பாஜக மட்டும்தான். பாஜகவினர் என்னை எந்த அளவிற்கு மிரட்டினாலும் நான் அஞ்ச மாட்டேன்; பயப்பட மாட்டேன்." என்றார்.

Also Read: குண்டர்களை வைத்து விவசாயியை மிரட்டும் அதிமுக MLA : சேலம் மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பு புகார்!