Tamilnadu

“மருத்துவத் தேர்வு ஆணையம் மூலம் தமிழ்நாட்டில் 1021 மருத்துவர்கள் தேர்வு” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

சென்னை பாரிமுனையில், மருத்துவக் கல்லூரி முதுகலை பட்டம் பயிலும் மருத்துவ மாணவர்களுக்கான தங்கும் விடுதி கட்டடம் மற்றும் சென்னை அரசு பல் மருத்துவ கல்லூரி இளநிலை மற்றும் முதுகலை பட்டம் பயிலும் மருத்துவ மாணவியருக்கு தங்கும் விடுதி கட்டிடத்தின் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்காக மருத்துவ தேர்வு ஆணையம் மூலம் தேர்வு நடப்பட்டது. இதில் 1021 மருத்துவர்கள் பணி நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி நிறைவடைந்தது. தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறையில் மருத்துவர் நியமனத்தில் பல்வேறு சட்டசிக்கல் இருந்தது. 30-க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்வுகாணப்பட்டுள்ளது. தற்போது 1021 மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இன்று தேர்வானவர்கள் பட்டியல் வெளியிடப்படும்.

மின்னஞ்சல் மூலமாக தேர்வு செய்யப்பட்ட மருத்துவர்களுக்கு தகவல் அனுப்பப்படும். 25,000 மருத்துவர்கள் தேர்வில் பங்கேற்றுள்ளனர். மருத்துவத்துறையில் முதல் முறையாக கலந்தாய்வு நடைபெற உள்ளது. வரும் 3, 4 ஆகிய தேதிகளில் 1021 மருத்துவர்களுக்கும் கலந்தாய்வு நடை பெற உள்ளது. கலந்தாய்வு நிறைவு பெற்று 5 ம் தேதி இறுதி பட்டியல் வெளியிடப்படும். 6ம் தேதி, தேர்வு செய்யப்பட்ட மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும்” என்றார்.

Also Read: ஒன்றும் இல்லாத பட்ஜெட் : ஒன்றிய பாஜக அரசின் இறுதி நிதிநிலை அறிக்கையை விமர்சித்த எதிர்க்கட்சிகள் !