Tamilnadu

பாசிச பாஜக அரசை எதிர்த்து 15 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கும் மாபெரும் மாணவர் பேரணி.. முழு விவரம் !

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளின் மாணவர் அணிகளின் சார்பில் நடைபெற உள்ள மாணவர் பேரணி குறித்து திமுக மாணவர் அணி செயலாளர் எழிலரசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, “பாசிச பா.ஜ.க அரசை எதிர்த்து, இந்தியா (I.N.D.I.A.) கூட்டணியில் இடம்பெறும் முக்கிய அரசியல் கட்சிகளின் மாணவர் அமைப்புகள் இணைந்து யுனெடெட் ஸ்டூடென்ஸ் ஆஃப் இந்தியா என்ற அமைப்பை உருவாக்கி, "Save EDUCATION Reject NEP; Save INDIA - Reject BJP என்ற முழக்கத்துடன், சென்ற 12 ஆம் தேதியன்று, டெல்லியில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற நாடாளுமன்றம் நோக்கிய மாபெரும் மாணவர் பேரணி நடைபெற்றது.

இந்தியாவின் வடக்கே நடைபெற்ற பேரணியைத் தொடர்ந்து, தெற்கே சென்னையில் மாபெரும் மாணவர் பேரணியை யுனெடெட் ஸ்டூடென்ஸ் ஆஃப் இந்தியா கூட்டமைப்பு நடத்த முடிவெடுத்ததன் அடிப்படையில் வரும் 1-ம் தேதி சென்னையில் மாபெரும் மாணவர் பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணியில் இந்திய அளவிலான பல்வேறு மாணவர் அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்துக் கொள்ளவுள்ள நிலையில், பேரணியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைக்கிறார்.

பேரணியின் நிறைவில், கழக இளைஞர் அணிச் செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எழுச்சியுரை ஆற்ற உள்ளார். வரும் 1 ஆம் தேதி காலை 9 மணி அளவில் சென்னை இராயபுரம் செயின்ட் பீட்டர்ஸ் மைதானம் முதல் ராபின்சன் பூங்கா வரை இந்த மாபெரும் மாணவர் பேரணி நடைபெறவுள்ளது. இதில் 15,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

தேசிய கல்விக் கொள்கை, நீட், நெக்ஸ்ட் உள்ளிட்ட தேர்வுகளை நிராகரிக்க வேண்டும் என்றும், மேலும் பல்கலை வேந்தராக ஆளுநர் இருக்க கூடாது என்பதற்காக சட்ட மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பட்டுள்ளது, தற்போது ஆளுநர் அந்த மசோதாவை ஆளுநர் வைத்து உள்ளார். அதை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுத்தவுள்ளோம்.

இந்த பேரணியில் திமுக மாணவர் அணி, இந்திய மாணவர் சங்கம், திராவிடர் மாணவர் கழகம், மதிமுக மாணவரணி, அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், முற்போக்கு மாணவர் கழகம், முஸ்லிம் மாணவர் பேரவை, சமூக நீதி மாணவர் இயக்கம், மாணவர் இந்தியா, அனைத்திந்திய கிராமப்புற மாணவர் சங்கம், திராவிட இயக்க தமிழர் பேரவை மாணவரணி, தமிழ்நாடு மாணவர் முன்னணி மற்றும் பல்வேறு மாணவ அமைப்புகள் உள்ளிட்ட மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பினர் கலந்து கொள்ள உள்ளனர்” என்றார்.

Also Read: நாளை தொடங்கப்படுகிறது 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டம் : திட்டத்தின் விவரம் என்ன ?