Tamilnadu

“மோடி ஆட்சியை வீழ்த்துவதற்கு சபதம் ஏற்கிற நன்னாளே இந்தப் பொங்கல் பண்டிகை” : சிபிஐ(எம்) வாழ்த்துச் செய்தி!

2024 தேர்தலில் மோடி அரசு வீழ்த்தப்பட்டு நாடு முழுவதும் மக்கள் ஒற்றுமையும், மத நல்லிணக்கமும் வலுப்பட; இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட; மக்களின் வாழ்வை மலரச் செய்ய தைத் திருநாளில் சபதம் ஏற்போம்! என சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு அறிக்கையில், “உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இனிய தைத் திருநாள் வாழ்த்துகளை உரிதாக்குகிறோம்.

தமிழ் மக்களின் தனிச் சிறப்புமிக்க பண்பாட்டு வெளிப்பாடாக, கொண்டாடப்படுகிற பொங்கல் திருநாள், சாதி-மத வேறுபாடுகள் அனைத்தையும் கடந்து இயற்கையை போற்றுகிற, உழைப்பின் உன்னதத்தை உயர்த்திப் பிடிக்கிற சிறப்புமிக்க பண்டிகை ஆகும். இந்த நன்னாளில், மக்கள் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்திட அனைவரும் உறுதியேற்போம்.

இந்தாண்டு பொங்கல் விழா, முந்தைய ஆண்டுகளைவிட தனிச் சிறப்புமிக்கது என்று குறிப்பிடலாம். ஏனென்றால், தமிழ் மக்களின் பண்பாடுகள் உட்பட நாட்டின் பல்வேறு மதங்கள், இனங்கள், மொழிகள் கொண்ட மக்களின் வெவ்வேறு கலாச்சாரங்கள், பண்பாடுகள், பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட பன்முக இந்தியாவின் பண்புகளை மறுத்து, ஒற்றைக் கலாச்சாரம், ஒற்றை மொழி என இந்திய திருநாட்டை ஒற்றை ஆதிக்கத்தின்கீழ் கொண்டு வர துடிக்கும் பாஜக தலைமையிலான மோடி ஆட்சியை வீழ்த்துவதற்கு, சபதம் ஏற்கிற, அதற்கான வியூகங்களை துவக்குகிற திருநாள் இந்தப் பொங்கல் பண்டிகை என்றால் மிகையல்ல.

நாட்டின் அனைத்து மதச்சார்பற்ற, ஜனநாயக, முற்போக்கு சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து அமைத்துள்ள இந்தியா எனும் அணி சேர்க்கையின் வெற்றிப் பயணம் துவங்குகிற நன்னாளாக; அதன்மூலம் 2024 தேர்தலில் மோடி அரசு வீழ்த்தப்பட்டு நாடு முழுவதும் மக்கள் ஒற்றுமையும், மத நல்லிணக்கமும் வலுப்பட; இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட; மக்களின் வாழ்வை மலரச் செய்ய தைத் திருநாளில் சபதம் ஏற்போம்!" எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: "சமத்துவப் பொங்கலாய் கொண்டாடுங்கள், இனிய பொங்கல் இந்தியப் பொங்கல் ஆகட்டும்" : முதலமைச்சர் மடல் !