Tamilnadu

விவசாயிகளுக்கு ரூ.1500 கோடிக்கு வட்டியில்லா கடன்கள் வழங்கப்படும் : அமைச்சர் பெரிய கருப்பன் அறிவிப்பு!

ஆடு,மாடு, கோழி, மீன் ஆகியவற்றை வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கூட்டுறவுக் கடன் 2023-24 நிதியாண்டில் 1500 கோடி ரூபாய் அளவில் வழங்க உள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் பொதுமக்களுக்கு பல்வேறு வகையான கடன்களை வழங்கி வருகின்றன. வேளாண் கடன் அட்டை (KCC) திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்பு ( ஆடு, மாடு கோழி) மீன் வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களில் ஈடுபடும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கூட்டுறவு கடனாக 1500 கோடி ரூபாய் அளவில் வழங்கப்படும் என முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தல்களுக்குகிணங்க 2023-24 வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மானியக் கோரிக்கையின் போது அமைச்சர் (வேளாண் மற்றும் உழவர் நலத்துறை) அவர்களால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் அரசாணை (நிலை) எண். 168, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை நாள் 18.12.2023 இல் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 2023-24 ஆம் நிதியாண்டிற்கு கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களுக்கு வழங்கப்படும் வட்டியில்லா நடைமுறை மூலதனக் கடன்களுக்கு ஆண்டு குறியீடாக ரூ.1500 கோடி ( ரூபாய் ஆயிரத்து ஐந்நூறு கோடி) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே, கால்நடை வளர்ப்பு (ஆடு, மாடு கோழி) மீன் வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களில் ஈடுபடும் விவசாயிகள், தொடர்புடைய கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளை அணுகி இத்திட்டத்தின் மூலம் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Also Read: “ஒன்றிய அரசின் வரிப்பகிர்வில் கூட பாகுபாடு நடந்துள்ளது...” - பூவுலகு சுந்தரராஜன் கடும் விமர்சனம்!