Tamilnadu

தென் மாவட்டங்களில் கனமழை : அவசர கால உதவி எண் அறிவித்த தமிழ்நாடு அரசு -மீட்பு பணிகள் தீவிரம்!

குமரி அருகே வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லையில் 31 ஆண்டுகளுக்கு பிறகு கனமழை கொட்டி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 93.2 செ.மீ அதிகனமழை பதிவாங்கி உள்ளது.

இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மக்கள் தங்கும் இடங்களிலும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க போர்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை முதல் அதிகனமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் பொதுமக்கள், தங்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் பாதிப்புகள்குறித்த விவரங்களை தமிழ்நாடுஅரசின் “வாட்ஸ்அப்” எண் மற்றும் “டிவிட்டர்”-ல்பதிவுகளை தெரிவிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

அதில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் பெய்து வரும் கனமழை முதல் அதிகனமழை காரணமாக பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை அரசு பரிவுடன் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசித்துவரும் பொதுமக்களின் நலன் கருதி, மக்களுக்கு தேவைப்படும் உதவிகள் அனைத்தையும் உடனுக்குடன் வழங்கிட களத்தில் அதிகாரிகள் ஆயத்தமாக உள்ளனர். எனவே பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள பொது மக்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், தேவைப்படும் நிவாரண உதவிகள், மருத்துவ உதவிகள், மீட்பு நடவடிக்கைகள், முதலான விவரங்களை சமூக வலைதளத்தின் (Social Media) மூலம் தமிழ்நாடு அரசின் வாட்ஸ்அப்எண் : 8148539914 மற்றும் “டிவிட்டர்” மூலமாக பதிவுகளை தெரிவிக்குமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வாட்ஸ்அப்எண் : 8148539914

டிவிட்டர் : Username - @tn_rescuerelief, @tnsdma

Facebook id : @tnsdma

Also Read: “கோரிக்கை மனுக்களை தட்டிக் கழிக்க கூடாது : மக்களுக்காக உழைப்பதே எனது குறிக்கோள்” : முதலமைச்சர் பேச்சு!