Tamilnadu

தேசபாதுகாப்பு குறித்து பேசும் பா.ஜ.க இப்போது என்ன சொல்லப் போகிறது? : கனிமொழி எம்.பி கேள்வி!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், கடந்த 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று வழக்கம் போல் கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வந்தது. அப்போது அப்போது மக்களவையில் எம்.பிக்கள் அனைவரும் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென பார்வையாளர்கள் மாடத்திலிருந்து பெண் உட்பட 2 மர்ம நபர்கள் அரங்கிற்குள் குதித்தனர். அவர்கள் புகை குண்டுகளை அவைக்குள் வீசினர்.

இதனை கண்டு எம்.பி.-க்கள் பதறினர். அதோடு மர்ம நபர்களைப் பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது ஒருவர் மேஜை மீது குதித்து ஓடினார். பிறகு இருவரையும் எம்.பிக்கள் பிடித்து அங்கிருந்த பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர்.

தாக்குதல் நடத்தியவர்கள் சஹார் சர்மா, மனோரஞ்சன் என தெரியவந்துள்ளது. மேலும் இவர்களுடன் இருந்த பெண் நீலம் என்றும் மணிப்பூர் வன்முறையைக் கண்டித்து போராட்டம் நடத்தியதாகவும் அவர் போலிஸாரிடம் கூறியுள்ளார். அதோடு இவர்கள் சர்வாதிகாரம் ஒழிக, பாரத் மாதா கி ஜே என முழக்கங்களை எழுப்பியுள்ளனர். புதிய நாடாளுமன்றத்தில் நடந்த இந்த சம்பவம் தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மக்களவையில் என்ன நடந்தது என்று செய்தியாளர்களிடம் கனிமொழி எம்.பி விளக்கியுள்ளார். அப்போது பேசிய அவர்,"இந்த தாக்குதல் சம்பவம் நடந்தபோது நான் அவையில்தான் இருந்தேன். பார்வையாளர் பகுதியிலிருந்து இரண்டு பேர் கீழே குதித்தார்கள். ஒருவர் மேசை மீது ஏறி ஓடினார். மற்றொருவர் ஷுவில் இருந்து புகை குண்டை எடுத்து வீசினார். இதனால் அவை முழுவதும் புகை பரவியது. மூச்சுவிடமுடியாமல் உறுப்பினர்கள் கஷ்டப்பட்டனர். மேலும் கண் எரிச்சல் ஏற்பட்டது.

புதிய நாடாளுமன்றத்தில் இதுபோன்ற ஒரு தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. பார்வையாளர்கள் பகுதியிலிருந்து யார் வேண்டுமானாலும் உறுப்பினர்கள் இருக்கும் இடத்திற்கு எளிதில் வரக்கூடிய அளவிற்கு தான் கட்டமைப்பு உள்ளது. நாடாளுமன்றத்திற்குள் எம்.பிக்களே எளிதில் நுழைந்து விட முடியாது. அவர்களே இரண்டு நுழைவு வாயில்களைத் தாண்டிதான் வரமுடியும்.

இப்படி இருக்கும் போது இவர்கள் எப்படி உள்ளே நுழைந்தார்கள்?. இப்போது இருக்கும் பிரதமர் அவைக்கு வருவதில்லை. ஆனால் பிரதமர்கள் இருந்த ஒரு அவையில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஒன்றிய அரசை எதிர்த்து கேள்வி கேட்டால் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், எதிரானவர்கள் என்று கூறுகிறார்கள். இன்று நடந்துள்ள சம்பவம் தான் தேசப் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். இதற்கு பா.ஜ.க என்ன பதில் சொல்லப் போகிறது?. தனிப்பட்ட நபர்களால் இந்த தாக்குதலை நடத்தி இருக்க முடியாது. இது குறித்து ஒன்றிய அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய கும்பலுடன் பா.ஜ.க MPக்கு தொடர்பு? : யார் இந்த பிரதாப் சிம்ஹா?