Tamilnadu

"தமிழ்நாடு அரசின் மழைநீர் வடிகால் அமைப்பு பயனளித்துள்ளது" - நீர் மேலாண்மை வல்லுநர் கருத்து !

மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னையில் கடந்த 3-ம் தேதி இரவிலிருந்து 5ம் தேதி வரை அதி கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவை அடுத்து அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஊழியர்கள் களத்தில் இறங்கி வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைத்தனர்.

பின்னர் வெள்ளம் தேங்கிய பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் கடந்த 5 நாட்களாக இரவு பகல் பாராமல் நடந்து வருகிறது. சென்னையில் பெரும்பாலான இடங்களில் தேங்கிய தண்ணீர் அகற்றப்பட்டு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. மேலும் தாழ்வான பகுதியில் தேங்கியுள்ள மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சென்னையில் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டாலும் பேரழிவில் இருந்து சென்னையை காத்தது மழைக்கு முன்னர் 4 ஆயிரம் கோடியில், தமிழ்நாடு அரசு மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் அமைப்பே காரணமாக கூறப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் மழைநீர் வடிகால் அமைப்பு கண்டிப்பா பயனளித்துள்ளது என நீர் மேலாண்மை வல்லுநர் பேராசிரியர் ஜனகராஜன் கூறியுள்ளார்.

இது குறித்து ஊடகங்களுக்கு பேசிய அவர், "தமிழ்நாடு அரசு மழைநீர் வடிகால் அமைப்பு கண்டிப்பா பயனளித்துள்ளது. பலர் அறியாமல் தவறான தகவலை பரப்புகிறார்கள். என்றாலும் இது போன்ற மழைக்கு 40 ஆயிரம் கோடி செலவு செய்தாலும் ஏதும் செய்யமுடியாது. இந்த அரசு இரண்டு மழை நீர் வடிகால் அமைப்புகளுக்கு விடுபட இடங்களிலும் மழை நீர் வடிகால் அமைப்பை ஏற்படுத்தினர். அதோடு இது வரை மழை நீர் வடிகால் அமைப்பு ஏற்படுத்தப்படாத இடங்களிலும் அதனை ஏற்படுத்தியுள்ளனர்.

அது தவிர மிக முக்கியமான அடைப்பு இருக்கும் இடங்களில் எல்லாம் அதனை நீக்கியுள்ளனர். சிறப்பாக செயல்பட்டுள்ளனர். ஆனால், தொடர்ந்து 36 மணி நேரம் பெய்த மழையே இந்த சேதத்துக்கு காரணம். இவ்வளவு மழை பெய்யும் என யாரும் எதிர்பார்க்கவில்லை" என்று கூறியுள்ளார்.

Also Read: Poshan Tracker செயலியில் தொடரும் சிக்கல்கள்.. ஒன்றிய அரசுக்கு இது தெரியுமா? தயாநிதி மாறன் எம்.பி கேள்வி !