Tamilnadu

“அதிமுக செய்த நலத்திட்டங்களை கேட்டால், அதிமுகவினருக்கே தெரியாது...” - அமைச்சர் மா.சு விமர்சனம் !

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை சைதாப்பேட்டையில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி மகளிர் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில், சென்னை தெற்கு மாவட்ட திமுக கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவை சார்பில் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாடகர் ஆதங்குடி இளையராஜா இசைக்குழுவினர் நடத்தும் நாட்டுப்புற இன்னிசை நிகழ்ச்சி விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. .

இதில் சிறப்பு விருத்தினராக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு இசை கலைஞர்களை சிறப்பித்தார். அப்போது மேடையில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் பல்வேறு நல திட்டங்களை கலைஞர் நூற்றாண்டு நிகழ்ச்சி மூலம் நடத்தி வருவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "கலைஞர் நூற்றாண்டு விழாவானது, கலைஞர் அவர்களின் தியாகங்கள், சாதனைகள் பற்றி பேசக் கூடிய நிகழ்ச்சியாக இருக்க வேண்டும். ஆனால் அதில் ஓரிரு நிகழ்ச்சிகள் மக்களை மகிழ்விப்பதற்காக நடத்தப்பட்டு வருகிறது. பொதுவாக நாட்டுப்புற நிகழ்ச்சிகளை கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய மக்கள் தான் அதிக அளவில் கேட்கிறார்கள்.

அதனை நகர்ப்புறங்களில் இருக்ககூடிய மக்களும் கேட்க வேண்டும் என்பதற்காக தற்போது இங்கு நகர்ப்புற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. கலைஞர் அவர்களுக்கு நாட்டுப்புற நிகழ்ச்சிகள் என்றாலே தனி ஆர்வம் உண்டு. கழக தொண்டர்களும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக உழைத்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு இளைப்பாறும் நிகழ்ச்சியாக இது அமையட்டும்.

கலைஞர் நூற்றாண்டு நிகழ்ச்சி மூலம் பல்வேறு நல திட்டங்களை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதிமுகவினரோ அதுபோல் அவர்களது தலைவர்களுக்கு செய்யவில்லை. அதிமுகவின் தலைவராக தற்போது எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார். அவர் மக்களுக்காக என்னென்ன நலத்திட்டங்களை செய்தார் என்று கேட்டால், அது அதிமுகவினருக்கே தெரியாது.

எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அதிமுக இயக்கத்தில் அவரால் வாழ்ந்து கொண்டிருக்கின்றவர்கள்தான் இவர்கள். ஆனால் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவில் அவருக்கென்று காமராஜர் சாலையில் ஒரே ஒரு நூற்றாண்டு வளைவை வைத்து நூற்றாண்டு விழாவை அதிமுகவினர் முடித்துவிட்டார்கள்." என்றார்.

Also Read: மூளைச்சாவடைந்த தமிழ்நாடு செவிலியர் : உடல் உறுப்பு தானம் மூலம் 4 பேருக்கு மறுவாழ்வளித்து நெகிழ்ச்சி !