Tamilnadu

”வேந்தராகப் பிரதமர் பதவி வகிப்பது எப்படி?” : பேரவையில் பா.ஜ.கவுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் பொன்முடி!

ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காகத் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டம் தொடங்கிய உடன் மறைந்த தகைசால் தமிழர் சங்கரய்யா மற்றும் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் மறைவுக்குச் சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

பின்னர் தமிழ்நாடு ஆளுநர் திருப்பி அனுப்பப்பெற்ற மசோதாக்களை மீண்டும் சட்டப்பேரவையில் மறு ஆய்வு செய்து நிறைவேற்றிடும் அரசினர் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். இதையடுத்து அரசினர் தனித் தீர்மானத்தை ஆதரித்து சட்டமன்ற உறுப்பினர்கள் உரையாற்றினர்.

அப்போது பேசிய பா.ஜ.க உறுப்பினர் நயினார் நாகேந்திரன், " ஆளுநர் பற்றிப் பேசக்கூடாது என்று சொன்னீர்கள். ஆனால் ஆளுநரை விமர்சிக்கிறார்கள்" என கூறினார். அப்போது சபாநாயகர் அப்பாவு, "ஆளுநர்களின் செயல்பாட்டைத்தான் உறுப்பினர்கள் விமர்சித்தார்கள். ஆளுநரை விமர்சிக்கவில்லை என கூறினார். மேலும் நாளை நீங்கள் கூட ஆளுநராகலாம்" என கூறினார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

பின்னர் நயினார் நாகேந்திரன் துணைவேந்தர்கள் குறித்துப் பேசும் போது குறுக்கிட்ட அமைச்சர் பொன்முடி, "மேற்குவங்கத்தில் உள்ள ஒன்றிய பல்கலைக்கழகத்தின் வேந்தராகப் பிரதமர்தான் பதவி வகிக்கிறார். குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பல்கலைக்கழக வேந்தர்களாக அம்மாநில முதலமைச்சர்கள்தான் பதவி வகிக்கின்றனர்.

கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசுகள்தான் நியமிக்கின்றன. வேந்தர்கள், துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்பதை அரசியலமைப்புச்சட்டமே வழிவகை செய்திருக்கிறது." பதிலளித்தார். இதையடுத்து முதலமைச்சர் கொண்டுவந்த அரசினர் தனி தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.கவினர் வெளிநடப்பு செய்தனர்.

Also Read: ”அரசியலமைப்பு சட்டத்தை சிதைக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி” : சட்டப்பேரவையில் வெகுண்டெழுந்த MLAக்கள்!