Tamilnadu

“தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக உயர்த்த நடவடிக்கை...” - அமைச்சர் தங்கம் தென்னரசு !

அரசு நிர்வாகத்தின் கீழ் பல்வேறு துறைகள் செயல்பட்டாலும் கூட்டுறவு துறை என்பது ஒரு இயக்கம், இதன் அடிநாதமாக வேளாண்குடி மக்கள் உள்ளனர் என்றும் கூட்டுறவுத்துறை சார்பில் 12 ஆயிரம் கோடி இலக்கு நிர்ணையிக்கப்பட்டு இலக்கையும் தாண்டி 13 ஆயிரத்து 443 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என நெல்லையில் நடந்த கூட்டுறவு வாரவிழாவில் கலந்து கொண்ட நிதித்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

அனைத்திந்திய 70-வது கூட்டுறவு வாரவிழா மற்றும் கூட்டுறவு அமைப்புகளை கணினிமயமாக்கும் விழா பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது . இதில் தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, “கூட்டுறவுத்துறை மற்ற துறைகளைக் காட்டிலும் மிக முக்கியமான துறையாக அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக விளங்குகிறது. மற்ற அரசு துறைகள் அரசுத்துறை நிர்வாகத்தின் கீழ் நேரடியாக செயல்படும் நிலையில், கூட்டுறவுத்துறை மட்டுமே தனி இயக்கமாக செயல்படுகிறது பெருமைக்குரியதாகும். கூட்டுறவு துறையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் உடையது.நாட்டில் கல்வி பொருளாதாரம் வேளாண்மை உள்ளிட்ட அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட கூட்டுறவுத்துறை மிக முக்கியமாக பங்காற்றுகிறது.

பெரிய நிறுவனங்கள், தொழிற்சாலைகள் வந்தாலும் உள்நாட்டு உற்பத்தியை உயர்த்த வேண்டுமெனில் கிராம பொருளாதார உயர்வு மிகவும் அவசியமாகிறது. அதனால் சுய உதவி குழுக்கள், வேளாண் தொழில் செய்யும் மக்களுக்கு அதிக கடன்களை கூட்டுறவுத்துறை மிகச் சிறப்பாக வழங்கி வருகிறது. தற்போது திமுக அரசு பொறுப்பேற்றவுடன் ரூ.12,110 கோடி பயிர் கடன், ரூ.4118 கோடி நகை கடன், ரூ.2624 கோடி மகளிர் சுய உதவி குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

கடன் தள்ளுபடிகளோடு நிறுத்தாமல் மீண்டும் விவசாயிகள் தொழில் செய்யும் பயிர் செய்யும் வகையில் ரூ.12 ஆயிரம் கோடி பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயித்திருந்தோம். ஆனால் அதையும் தாண்டி மூன்று ஆண்டுகளில் ரூ.13,443 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் ரூ.4988 கோடி பயிர் கடன் வழங்கியுள்ளோம்.

தமிழகத்தின் பொருளாதாரத்தை 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் டாலராக உயர்த்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொருளாதார சுழற்சி அனைத்து தரப்பினருக்கும் சென்றடையும் வகையில் ரூ.7 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.” என்றார்.