Tamilnadu

“சிறப்பு மருத்துவ படிப்பில் மாநில அரசுக்கு 50%” : நீதிமன்றம் சென்று தமிழ்நாடு பெற்ற உரிமை -அமைச்சர் மா.சு

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தீபாவளி தீக்காய சிறப்பு பிரிவை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். தொடர்ந்து தீபாவளி தீக்காய சிறப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு இனிப்புகளை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது, "தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதை மாவட்ட வாரியாக கண்டறிந்து அவர்களுக்கான தீவிர சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் அவர்களோடு தொடர்பில் இருப்பவர்களுக்கும் பல்வேறு மருத்துவ வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. அரசு சார்பில் உதவித்தொகை வழங்கும் அந்தப் பணியும் நடைபெற்று வருகிறது.

'காச நோயில்லா தமிழ்நாடு' என்ற இலக்கை நோக்கியும் தமிழ்நாடு அரசு பல முன்மாதிரியான திட்டங்களை செய்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் காசநோய் பாதிப்பு உண்டானவர்களுக்கு ஊட்டச்சத்து தருவதற்கு முதல்வர் அவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை தேர்வு செய்து, அவர்கள் வாயிலாகவும் ஊட்டச்சத்து வழங்கப்பட்டு வருகிறது. அரசின் சார்பில் உதவி தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

பெரிய அளவில் இந்த இரு பாதிப்புகளும் இல்லாமல் குறைந்து வருகிறது என்பதை பார்க்க முடிகிறது. நிச்சயம் தமிழ்நாடு 2025-க்கு பிறகு தொழு நோய் பாதிப்பு இல்லா தமிழ்நாடு, காசநோய் இல்லா தமிழ்நாடு என்ற இலக்கில் வெற்றி பெறும்.

DM, MCH உள்ளிட்ட உயர் சிறப்பு மருத்துவ படிப்பில் 100 சதவீத இடங்களையும் ஒன்றிய அரசே நிரப்பும் என்று ஒன்றிய அரசு விதிமுறையை கொண்டு வந்தது. ஆனால் 50 சதவீத இடங்களை மாநில அரசே நிரப்பிக்கொள்ள வேண்டும் என்ற அனுமதியை தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றம் வரை சென்று பெற்றுள்ளது. இதன் மூலம் தமிழக ஒதுக்கீட்டிற்கான 50 சதவீத இடங்களில் தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு உயர் சிறப்பு மருத்துவ படிப்பில் 25 சதவீத இடங்களும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் மீதம் உள்ள 25 இடங்களிலும் சேர்க்கப்படுவர்.

ஆனால் முதுகலை மருத்துவ படிப்பில் கலந்தாய்வு முடிந்து காலியாக உள்ள இடங்களுக்கு தமிழக அரசே கலந்தாய்வு நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் ஒன்றிய அரசு எழுதிய கடிதத்திற்கு இதுவரை பதில் ஒன்றிய அரசிடம் இருந்து எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை" என்றார்.

அதாவது இந்த ஆண்டு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுவிக் மாண்டியாவை நேரில் சந்தித்தபோது, இந்த ஆண்டு உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் உள்ள 50% இடங்களை தமிழக அரசே நிரப்பிக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

மேலும் வழக்கும் தொடரப்பட்டு அந்த தீர்ப்பு தமிழ்நாடு அரசுக்கு சாதகமாக வந்தது. இதைத் தொடர்ந்து கடந்த இரு நாட்களுக்கு முன்பு உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் 50 சதவீத இடங்களை தமிழக அரசே நிரப்பிக் கொள்ளலாம் என்று ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: தீபாவளி பண்டிகை : வெடி விபத்துக்கு சிகிச்சை அளிக்க 95 மருத்துவமனைகளில் சிறப்பு வார்டு - அமைச்சர் மா.சு!