Tamilnadu

பேருந்தில் பயணம் செய்த மாணவர்கள் மீது தாக்குதல் : பா.ஜ.க நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் கைது!

சென்னையை அடுத்த போரூரிலிருந்து குன்றத்தூர் நோக்கி மாநகர பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இப்பேருந்தில் மாணவர்கள் சிலர் பேருந்தின் படிக்கட்டு அருகே நின்றுகொண்டு சென்றுள்ளனர்.

அப்போது அந்தவழியாக வாகனத்தில் வந்த பா.ஜ.க நிர்வாகியும், நடிகையுமான ரஞ்சனா நாச்சியார் பேருந்தை வழிமறித்து நிறுத்தியுள்ளார். பின்னர் படிக்கட்டில் நின்று இருந்த மாணவர்களின் கண்ணத்தில் அடித்து அவர்களைப் பேருந்திலிருந்து கீழே இறக்கிவிட்டுள்ளார்.

மேலும் பேருந்தின் நடத்துனரையும் ஆபாசமாகப் பேசியுள்ளார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து பேருந்தின் நடத்துநர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரை அடுத்து போலிஸார் ரஞ்சனா நாச்சியாரைக் கைது செய்து கெருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றனர். அப்போது அவர் கைது ஆணை இருக்கிறதா? என்ன காரணத்திற்காகக் கைது செய்கிறீர்கள்? என போலிஸாரிடம் வாக்குவாதம் செய்தார்.

இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவர்களைத் தாக்கிய ரஞ்சனா நாச்சியாருக்குப் பெற்றோர்களும், மாணவர் அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: ”உங்களுக்கு இங்க முடி வெட்ட முடியாது” - ஆந்திராவில் தீண்டாமை : தாசில்தார் செய்த நெத்தியடி சம்பவம்!