Tamilnadu

கார் ஓட்டுநர் கொலை வழக்கு : தலைமறைவான அதிமுக ஒன்றிய செயலாளரை தட்டி தூக்கிய போலீஸ் !

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அம்பளிக்கையில் அதிமுகவின் கிழக்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் என்.பி நடராஜன். நெய் வியாபாரம் செய்து வரும் இவரது கார் ஓட்டுநராக அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்த சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடராஜனிடம் ஓட்டுநர் சுரேஷ், ரூ,6 லட்சம் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து நடராஜனுக்கு பயந்து ஓட்டுநர் சுரேஷ் தலைமறைவாகி இருந்துள்ளார். இதனால் நடராஜன், சுரேஷின் தாய்மாமாவை அழைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதையடுத்து தலைமறைவாகி இருந்த சுரேஷ், திரும்ப ஊருக்கு வந்தார். அப்போது அவரது தாய்மாமா வடிவேல் மற்றும் அதிமுக நிர்வாகி நடராஜ் ஆகியோர் சுரேஷை நடராஜனின் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அதிமுகவின் கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.பி நடராஜன்

அங்கே வைத்து அவரிடம் தனது பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அதற்கு தன்னிடம் இப்போது இல்லை என்றும், விரைவில் தந்துவிடுவதாகவும் கூறியுள்ளார். இதற்கு பணியாத நடராஜ், தொடர்ந்து அவரை குடிக்க வைத்து முழு போதையில் தள்ளி, அவரது கழுத்தை கயிறை கொண்டு நெரித்து துடிக்கத்துடிக்க கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை யாருக்கும் தெரியாமல் மயானத்தில் வைத்து எரித்துள்ளார்.

சுரேஷ் குறித்து போலீசில் அவரது குடும்பத்தார் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரிக்கையில், சுரேஷின் மாமா வடிவேல் பிடிபட்டார். அவரிடம் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில் இந்த சம்பவத்தில் அதிமுக ஒன்றிய செயலாளர் நடராஜ் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்ய செல்லும்போது, தலைமறைவாகி விட்டார்.

கொலை செய்யப்பட்ட சுரேஷ்

தொடர்ந்து தலைமறைவாகி இருந்த அதிமுக நிர்வாகியை டிஎஸ்பி முருகேசன் தலைமையிலான தனிப்படையினர், பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக தேடி வந்த நிலையில் இன்று சென்னை கோயம்பேடு பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பணத்தை கொடுக்காத ஆத்திரத்தில் கொலை செய்து தலைமறைவாக இருந்த அதிமுக நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக நிர்வாகி எம்பி நடராஜன் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுகவின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: நிலக்கரி இறக்குமதியில் ரூ.10 ஆயிரம் கோடி ஊழல்? : மோடி ஆட்சியில் அதானி மெகா வசூல் - Financial Times பகீர்!