Tamilnadu

”பொதுக்கூட்டம் நடத்தி முதலமைச்சரிடம் மன்னிப்பு கேளுங்கள்” : குமரகுருவுக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை!

கள்ளக்குறிச்சி மந்தைவெளி பகுதியில் கடந்த 19ம் தேதி அ.தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு, தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசினார்.

இதையடுத்து அவதூறு கருத்துக்களைத் தெரிவித்த குமரகுரு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி தி.மு.க தெற்கு பகுதி செயலாளர் வெங்கடாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலிஸார் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் குமரகுரு மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் குமரகுருவுக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு, காவல்துறையிடம் முறையான அனுமதி வாங்கி ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தி, அதில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இது தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

Also Read: ”NMC வெளியிட்டுள்ள அறிவிப்பினை உடனடியாக நிறுத்த வேண்டும்” : பிரதமருக்கு கடிதம் எழுதிய தமிழ்நாடு CM !