Tamilnadu

”NMC வெளியிட்டுள்ள அறிவிப்பினை உடனடியாக நிறுத்த வேண்டும்” : பிரதமருக்கு கடிதம் எழுதிய தமிழ்நாடு CM !

தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பினால், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (4-10-2023) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறப்பதைக் கட்டுப்படுத்துவதற்காக தேசிய மருத்துவ ஆணையம் (NMC) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பால் உருவாக்கப்பட்ட பின்னடைவு குறித்து உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன்.

இந்தியாவின் சுகாதாரத் தலைநகராக சென்னை உருவெடுத்துள்ளது. அரசு மற்றும் தனியார் துறைகளில், நமது திறமையான மருத்துவ வல்லுநர்கள் தமிழக மக்களுக்கு மட்டுமல்ல, பிற மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளுக்கும் வெற்றிகரமாக சேவை செய்ய முடிந்தது. இது தரமான சுகாதார சேவைகளுக்கான பெரும் தேவையை உருவாக்கியுள்ளது மற்றும் எதிர்காலத்தில் அதை பூர்த்தி செய்வதற்கு புதிய மருத்துவமனைகள் முற்றிலும் அவசியம்.

இத்தகைய கட்டுப்பாடு விதிப்பதன் மூலம், எதிர்காலத்தில் மருத்துவத் துறையில் புதிய மருத்துவமனைகளும், புதிய முதலீடுகளும் தமிழ்நாட்டிற்கு வருவதற்கான வாய்ப்பு முற்றிலுமாக இல்லாமல் போய்விடும் என்று குறிப்பிட்டு, தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பினை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டுமென்றும், இதுதொடர்பாக மாநில அரசுகளுடன் உரிய ஆலோசனைகளை மேற்கொள்ளத் தேவையான அறிவுரைகளை ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு வழங்கிட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: “மீண்டும் மஞ்சப்பை” திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் : அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்!