Tamilnadu

10205 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை.. இளைஞர்களின் கனவுகளை நிறைவேற்றிய திராவிட மாடல் அரசு: குவியும் பாராட்டு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (27.9.2023) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தொகுதி-4 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 10,205 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 12 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி, வாழ்த்தினார்.

தமிழ்நாடு மாநில அரசுப் பணிகளில், இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் போன்ற தொகுதி-4ல் அடங்கிய வெவ்வேறு பதவிகளுக்கான 10,205 காலிப் பணியிடங்களை நிரப்பிடும் வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பெற்ற போட்டித் தேர்வில் சுமார் 22 இலட்சம் பேர் பங்கேற்று, அதில் 10,205 நபர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் “அரசுப் பணி” என்ற கனவை நனவாக்கும்  வகையில் போட்டித் தேர்வில் தெரிவு செய்யப்பட்டுள்ள 10,205 இளைஞர்களுக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை, கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 12 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி சிறப்பித்தார்.

அரசின் பல்வேறு துறைகள், குறிப்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, பள்ளிக்கல்வித் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு தட்டச்சர் - 3339, இளநிலை உதவியாளர் - 5278, கிராம நிர்வாக அலுவலர் - 425, வரி தண்டலர் - 67, புல உதவியாளர் - 19, சுருக்கெழுத்து தட்டச்சர் – 1077, என மொத்தம் 10,205 பணியிடங்களுக்கு இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

இவ்விழாவில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், புதியதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு அரசுப் பணியின் முக்கியத்துவத்தை விளக்கியதோடு, அரசுப் பணியாளர்கள் பொதுமக்களுக்கு சேவை மனப்பான்மையுடன், குறித்த காலத்திற்குள் பணியாற்றி, அரசின் திட்டங்கள் யாவற்றையும் உடனுக்குடன் மக்களுக்கு சென்றடையும் வகையில் சிறப்பான பணியினை மேற்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தினார். 

தமிழ்நாடு முதலமைச்சர் இன்றைய தினம் 10,205 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கும் நிகழ்வினை  தொடங்கி வைத்ததை தொடர்ந்து, மாவட்டங்களில் அமைச்சர் பெருமக்கள் பணிநியமன ஆணைகளை வழங்குகிறார்கள்.

Also Read: “உட்கார வைத்து பேசுங்கள்.. அதுதான் சக மனிதருடைய சுயமரியாதை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!