Tamilnadu

2021ம் ஆண்டு மருத்துவ சான்றுகள்.. RBVS மணியனின் ஜாமின் மனு தள்ளுபடி.. நீதிமன்றம் உத்தரவு!

சென்னை தியாகராயநகரில் கடந்த 11ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பேசிய, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவரும், விவேக பாரதி அமைப்பின் நிறுவனருமான ஆர்.பி.வி.எஸ். மணியன், திருவள்ளுவர், அம்பேத்கர் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் குறித்து இழிவாக பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை முன்னாள் மாவட்ட தலைவர் இரா. செல்வம் புகாரளித்தார்.

இதனடிப்படையில் மணியன் மீது, வன்கொடுமை தடைச்சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த மாம்பலம் காவல்துறையினர், அவரை கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணியன், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை செப்டம்பர் 22ம் தேதி நீதிபதி அல்லி அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து ஜாமீன் கோரிய மணியனின் மனு மீது வரும் 25ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி அல்லி தெரிவித்தார்.

இதையடுத்து இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது போலிஸார் தரப்பில், மணியன் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ சான்றுகள் அனைத்துமே 2021ம் ஆண்டு சேர்ந்தவை. அவரது பேச்சு சமூகத்தில் இரு பிரிவினரிடையே பதற்றத்தை உருவாக்கியுள்ளதால் ஜாமீன் வழங்கக்கூடாது வாதம் முன்வைக்கப்பட்டது. பின்னர் RBVSமணியனின் ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

Also Read: ”தண்ணீர் திறக்க எதிர்ப்பு.. தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைக்கும் பாஜக” : கே.பாலகிருஷ்ணன் ஆவேசம்!