Tamilnadu

காதலன் பெரியார்வாதி.. காதலி ஆன்மீகவாதி: 2 முறைப்படி திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி -சேலத்தில் நெகிழ்ச்சி

சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் தினேஷ். கேட்டரிங் நடத்தி வரும் இவர், ஒரு பெரியார் கொள்கையாளாராக இருந்து வருகிறார். இந்த சூழலில் இவர் ராசிபுரம் பகுதியை சேர்ந்த தனலட்சுமி என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில், பெற்றோரிடம் தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.

எனவே இருவரது பெற்றோரும் இவர்கள் காதலுக்கு சம்மதம் தெரிவிக்க அது திருமணத்தில் வந்தது. ஆனால் இவர்களது பெற்றோர், மற்றும் காதலி ஆன்மிகம் சார்ந்தவர்கள் என்பதால் அவர்கள் முறைப்படி திருமணம் செய்து வைக்க விருப்பம் தெரிவித்தனர். எனவே அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், குடும்பத்தார், உறவினர் முன்னிலையில் இன்று ஆன்மீக முறைப்படம் திருக்கோவிலில் திருமணம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து தினேஷ் ஒரு பெரியார் கொள்கையாளராக இருந்து வருவதால், சுயமரியாதை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று குடும்பத்தாரிடம் முறையிட்டுள்ளார். அதற்கு குடும்பத்தாரும் சம்மதம் தெரிவிக்கவே, கோயிலில் திருமணம் முடிந்த கையோடு, அருகில் இருக்கும் பெரியார் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், தினேஷ் - தனலட்சுமி ஜோடி ஒருவருக்கொருவர் மாலை திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நெகிழ்ச்சி நிகழ்வு குறித்து பேசிய மணமகன் தினேஷ், ஆணும் பெண்ணும் சமம் என்பதை உணர்த்தும் புனிதமாக பெரியார் சிலை முன்பாக மாலை மாற்றிக்கொண்டு சமத்துவ திருமணம் செய்ததாக தெரிவித்தார். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.