Tamilnadu

ரூ.7.50 லட்சம் கோடி ஊழல் குறித்து முதலில் பேசுங்கள்?.. பா.ஜ.கவினருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "ஒரே நாடு ஒரே தேர்தலைக் கொண்டு வந்து என்ன சாதிக்கப்போகிறார்கள். அண்மையில்தான் கர்நாடகாவில் தேர்தல் நடந்து முடிந்தது. ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டுவந்தால் அங்கு ஆட்சி கவிழாதா? இப்படிப் பல கேள்விகள் இருக்கின்றன.

இந்தியாவையே நாங்கள் மாற்றப்போகிறோம் என்று சொன்னார் மோடி. இப்போது இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றிக் காட்டிவிட்டார். சொன்னதைச் செய்து காட்டிய மோடிக்கு வாழ்த்துக்கள்.

7.50 லட்சம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக சி.ஏ.ஜி அறிக்கை தெரிவித்துள்ளது. ஆனால் இதைப் பற்றி மோடியும், ஒன்றிய அமைச்சர்களும், பா.ஜ.கவினரும் பேச மறுக்கின்றனர். இதற்குப் பதில் சொல்ல முடியாமல்தான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனைகளைக் கிளப்பி வருகின்றனர்.

மணிப்பூரில் கடந்த 5 மாதங்களுக்கு மேலான வன்முறை தொடர்ந்து வருகிறது. அங்கு மக்கள் கடும் அவதிகளைச் சந்தித்து வருகின்றனர். இது பற்றி எல்லாம் முதலில் பா.ஜ.கவினர் பேசட்டும். அதன் பிறகு சனாதனம் பற்றிப் பேசும். நான் எங்கும் போகவில்லை இங்குதான் இருக்கிறேன்." என தெரிவித்துள்ளார்.

Also Read: ஒரே நேரத்தில் ஒரு கோடி மகளிருக்கு ரூ.1000.. தமிழ்நாடு அரசின் மாபெரும் திட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்