Tamilnadu

“‘Supreme Court of Bharat’ என்று சொல்ல முடியுமா?” - மோடி அரசை விளாசிய ஆசிரியர் கி.வீரமணி!

அரசமைப்புச் சட்டத்தின்மீது உறுதிமொழி எடுத்து அதற்கு முரணாக ஒன்றிய பி.ஜே.பி. அரசு நடக்கலாமா? ‘சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்தியா’ என்பதை ‘சுப்ரீம் கோர்ட் ஆப் பாரத்’ என்று சொல்ல முடியுமா? ‘இண்டியா’ என்று எதிர்க்கட்சிக் கூட்டணிகளின் ஒன்றிணைப்பைக் கண்டு அஞ்சுவதே இதற்குக் காரணம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

இந்தியாவின் ஒரு மாநிலத்தின் பெயரை மாற்றவேண்டுமானால், சட்ட நியதிப்படி, அதற்குரிய அரசமைப்புச் சட்ட நடைமுறைப்படி சில சரியான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றவேண்டும். எடுத்துக்காட்டாக ‘சென்னை ராஜ்ஜிய’த்தை அறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்ததும் சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றிய பிறகு, அது நாடாளுமன்றத்திலும் ஒப்புக்கொள்ளப்பட்டே நிகழ்ந்ததைச் சுட்டிக்காட்டலாம்.

அரசமைப்புச் சட்ட நடைமுறைகளுக்கு நேர் எதிர்மறையான - மீறிய செயல் ஆகாதா?

நேற்று (5.9.2023) திடீரென குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து அவர் விடுத்த வாழ்த்துச் செய்தியில், ‘President of Bharat’ என்று அழைப்பிதழில் அச்சிடுவது என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கட்டளைப்படி நடக்காமல், எந்த ஒரு நடைமுறையையும் பின்பற்றாமல், முன் அறிவிப்பு ஏதும் கொடுக்காமல், அழைப்பிதழில் ‘பாரத்’ என்று நாட்டின் பெயரை மாற்றி அமைத்தல் - உறுதிமொழி எடுத்த அரசமைப்புச் சட்ட நடைமுறைகளுக்கு நேர் எதிர்மறையான - மீறிய செயல் ஆகாதா என்பதே சட்டம் அறிந்தோரின் சரியான கேள்வி.

இந்திய அரசமைப்புச் சட்டம், ‘‘இந்தியா’’ என்பது Preamble என்ற முகப்புரையிலிருந்தே தொடங்குகிறது. ‘இந்தியா’ என்ற பெயர் உள்ள அரசு அமைப்பின் கல்வி நிலையங்கள், ‘இந்தியன்’ என்று பெயருடன் வரும், IAS, IPS, IRS இன்று IIT, IIM போன்றவைகள் பெயரும் இதே ஒரே கோணத்தில் மாற்றி அச்சிட முடியுமா?அரசமைப்புச் சட்டப் புத்தகத்தைக் காட்டியே சுட்டிக்காட்டினோம்!

‘‘கண்டதே காட்சி, கொண்டதே கோலம்‘’ என்பதுபோல், எதிர்க்கட்சி கூட்டணியினர் தங்கள் 26 கட்சிக் கூட்டணிக்கு ‘I-N-D-I-A’ என்று பெயர் சூட்டிவிட்டதால், நாட்டின் உலகறிந்த பெயரான ‘இந்தியா’வை, ‘பாரத்’ என்று ஒரே அழைப்பிதழ்மூலம் கூறுவதற்குப் பொதுநிலையில் உள்ள குடியரசுத் தலைவர் முனைவது எவ்வகையில் ஏற்கத்தக்கது? இதை நாம் நேற்று (5.9.2023) சிதம்பரத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்திலேயே அரசமைப்புச் சட்டப் புத்தகத்தைக் காட்டியே சுட்டிக்காட்டினோம்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத், இனி இந்த நாட்டை ‘பாரத்’ என்றே அழைக்கவேண்டும் என்று கூறுகிறார். அடுத்து சில வாரங்களில் இப்படி ஓர் அழைப்பிதழ் குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து என்றால், நாட்டின் குடியரசுத் தலைவருக்கு மேற்பட்ட Super President ஆக ஆர்.எஸ்.எஸ். தலைவர் திகழ்கிறாரா? அவர் ஆணையிடுவதை இங்கே அரசின் முதன்மையானவர் செய்கிறார் என்றால், இது Extra Constitutional Authority - வெளியிலிருந்து அரசமைப்புச் சட்டத்திற்கும் மேலான பதவியை எப்படி ஆர்.எஸ். வரித்துக் கொண்டதோ!

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதல் கூறு (Article 1) India that is Bharat shall be a Union of States என்று இருக்கிறதே என்று நமக்கு சிலர் விளக்கம் விடையாகக் கூறக் கூடும். ‘பாரத்’ என்று முன்பு இருப்பது தற்போதுள்ள பெயரான இந்தியா அல்லவா? அறியாமையா? அல்லது அரசியல் ஆணவமா?

அதுமட்டுமல்ல, அதே பிரிவின் அடுத்த வாசகப் பகுதி Shall be a Union of States என்று இருப்பது, மாநிலங்களைக் கொண்ட ஒன்றியம் என்று கூறுகிறபோது, சரியான தமிழ்ச்சொல் Union என்பதற்கு ஒன்றியம் என்று விளக்கம் சொன்னால், அதற்குப் பிரிவினைப் பேசுகிறார்கள் என்று கூறுவது அறியாமையா? அல்லது அரசியல் ஆணவமா?

‘பாரத்’ என்பதற்குத் தொடக்கப் பெயரும், எல்லையும் என்ன தெரியுமா? ‘ஆரிய வர்த்தம்‘ என்ற இமயமலைக்கும் - விந்திய மலைக்கும் இடையே உள்ள பகுதியே பாரதம்; அதில், மற்ற பகுதிகள் சேராது. சனாதனத்தின் விளக்க நூலான மனுஸ்மிருதி 10 ஆம் அத்தியாயம் 44 ஆவது சுலோகப்படி இவ்விதம் கூறப்படுவது என்ன ஆவது?

பௌண்டரம், ஔண்டரம், திராவிடம், காம்போசம், யவநம், சகம், பாரதம், சீகம், கிராதம், தரதம், கசம் இந்தத் தேசங்களையாண்டவர்களனைவரும் மேற்சொன்னபடி சூத்திரர்களாய் விட்டார்கள் (அத்தியாயம் 10; சுலோகம் 44). இதனை ஆர்.எஸ்.எஸ். ஏற்குமா?

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி நினைத்தால், ‘Supreme Court of India’ என்பதையெல்லாம் தீர்ப்பு கூறுமுன் , ‘Supreme Court of Bharat’ என்று நாளை முதலே மாற்றிவிட முடியுமா?

ஆனால், இப்படி நடப்பது அரசமைப்புச் சட்டத்தின்மீது எடுத்த பிரமாணத்தின்முன், சட்டம் எமக்குத் துச்சம் என்ற போக்குதானே பல விஷயங்களில் உள்ளது! நாடாளுமன்றத்தில் 4 ஆண்டுகள் மக்களவைத் துணைத் தலைவர் பதவியே நிரப்பப்படாமல், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ ஒரு சில நாள்களில் முடிவிற்கு வருவது ஆச்சரியமில்லை.

இறையாண்மை இறுதியில் மக்களிடம்தான் - மறவாதீர்!

ஆனால், இறையாண்மை இறுதியில் மக்களிடம்தான் - மறவாதீர், ஆளவந்தார்களே! ‘இந்தியாவை மாற்றுவோம்‘ என்று நீங்கள் முதலில் கூறியதற்கு, இதுதான் பொருளா? என்று தமிழ்நாடு முதலமைச்சர் கேட்ட கேள்வி நியாயமான கேள்வி அல்லவா?" எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: ’இந்திய குடியரசு தலைவர்’ என்பதற்கு பதில் ’பாரத் குடியரசு தலைவர்’ - இந்தியா பெயரைக் கண்டு அஞ்சும் பாஜக !