Tamilnadu

”நாங்க நரேந்திர மோடி கட்சி டொனேஷன் குடுங்க”.. தனியார் கல்லூரிக்குள் புகுந்து இந்து சேனா அமைப்பு மிரட்டல்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரிக்கு நேற்று மூன்று பேர் காரில் வந்தனர்.

இவர்கள் கல்லூரி நிர்வாகத்தின் அறைக்கு சென்ற உடனே "எங்களுக்கு நிதி கொடுங்கள்" என கேட்டுள்ளனர். அப்போது அங்கிருந்த நிர்வாகத்தினர் "நீங்கள் யார்? உங்களுக்கு நாங்கள் ஏன் நிதி கொடுக்க வேண்டும்?" என்று கேட்டுள்ளனர். இதற்கு அவர்கள்" நாங்கள் இந்து சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள்.. நரேந்திர மோடியின் கட்சிக்காரர்கள். எங்களுக்கு நீங்கள் டொனேஷன் தரவேண்டும்" என கூறி தகராறு செய்தனர்.

அப்போது அவர்களைக் கல்லூரி நிர்வாகத்தினர் சமாதானம் செய்ய முயன்றபோதும், மூன்று பேரும் கத்தி கூச்சலிட்டுக் கொண்டு கையை நீட்டி மிரட்டினர். இந்த சம்பவத்தைப் பார்த்து கல்லூரி மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரிக்குள் புகுந்து இப்படியா டொனேஷன் கேட்டு மிரட்டும் ஒரு கட்சி என பலரும் ஆச்சரியப்பட்டு, இந்த சேனா அமைப்பை விமர்சித்து வருகின்றனர்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலானதை அடுத்து கல்லூரிக்குள் புகுத்து தகராறு செய்த மூன்று பேரும் தலைமறைவாகியுள்ளது. இது குறித்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: ரூ.10 லட்சம் மதிப்புள்ள 1250 கிலோ குட்கா கடத்தி வந்த பா.ஜ.க கவுன்சிலர்.. தனிப்படை அமைத்து அதிரடி கைது !