Tamilnadu

”ED,மோடியை கண்டு அஞ்சும் அடிமை அ.தி.மு.க தான்”.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி பேச்சு!

கடலூர் மேற்கு - கிழக்கு மாவட்ட தி.மு.க இளைஞர் அணி நிர்வாகிகளின் செயல் வீரர்கள் கூட்டம், கழுதூரில் நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "நமது இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாடு டிசம்பர் 17ம் தேதி நடைபெறுகிறது. இம்மாநாடு ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பாசிச பா.ஜ.க ஆட்சியை விரட்டுவதற்கான முன்னோட்டமாக அமைய உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் கழகத்தின் வெற்றிக்காக இளைஞர் அணியினர் இப்போதில் இருந்தே உழைக்க வேண்டும்.

மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.கவினர் மாநாடு என்ற பெயரில் கேலிக் கூத்து ஒன்றை நடத்தியுள்ளனர். ஒரு மாநாடு என்றால் எப்படி இருக்க வேண்டும். அந்த கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் குறித்துப் பேசுவார்கள்.

ஆனால் அ.தி.மு.க நடத்தியது மாநாடு அல்ல. ஆடல் பாடல் நிகழ்ச்சி. மேலும் டன் கணக்கில் உணவுகளை வீணடித்துள்ளனர். அதே நாளில் நாம் நீட் தேர்வுக்கு எதிராக நடத்திய உண்ணாநிலை அறப்போராட்டம் தமிழ்நாடு முழுவதும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் வரை நமது போராட்டம் தொடரும்.

4 மாதங்களுக்கு மேலாக மணிப்பூரில் வன்முறை நீடித்து வருகிறது. அங்கு நடந்த கொடூரங்கள் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் 5 நிமிடம் மட்டுமே பேசினார். பா.ஜ.கவின் ஊழல்களை சி.ஏ.ஜி அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், உயிரிழந்தவர்கள் பெயரில் மருத்துவ காப்பீடு திட்டங்கள், மருத்துவச் சிகிச்சைக்கு உதவி எனப் போலிக் கணக்குகள் காட்டி ரூ.7.5 லட்சம் கோடிக்கு ஊழல் செய்துள்ளது பா.ஜ.க அரசு.

பா.ஜ.கவின் ஊழலை நாம் வெளிக்கொண்டு வருவதால்தான் நம்மைப் பயமுறுத்துவதற்காக ED, CBI ஏவுகின்றனர். நீங்கள் யாரை அனுப்பினாலும் நாங்கள் பயப்பட மாட்டோம். ED, மோடியைக் கண்டு அஞ்சும் அடிமை அ.தி.மு.கதான். நாங்கள் அல்ல" என தெரிவித்துள்ளார்.

Also Read: ”பொய் வாக்குறுதி கொடுத்த மோடி ஆட்சியை இளைஞர்கள் தூக்கி எறிவார்கள்".. மல்லிகார்ஜூன கார்கே உறுதி!