Tamilnadu

சென்னை மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதா?.. காவல்துறை விளக்கம் !

சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில், இன்று மதியம் இரண்டு மாணவ தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாகவும் முன்விரோதம் இருந்து வந்த நிலையில் யார் பெரியவர் என்ற மோதலில் மறைத்து வைத்திருந்த வெடிபொருளை வீசிவிட்டு மாணவர்கள் தப்பி சென்றனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வெடித்தது நாட்டுவெடிகுண்டு என தவறான தகவல் சமூகவலைத்தளங்களில் பரவியது. இதனைக் குறிப்பிட்டு பலரும் அரசை விமர்சித்து வந்தனர். இந்த நிலையில், இது க்ருய்து சென்னை பெருநகர காவல் துறையின் தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "கல்லூரியில் உள்ளே இரண்டு மாணவர்கள் தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் தகராறு ஏற்பட்டது, இரண்டு மாணவர்கள் திருவிழாவில் பயன்படுத்தப்படும் பட்டாசு நாட்டு பட்டாசு ஒன்றை, பயமுறுத்தும் நோக்கில் வெடித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை, சமூக ஊடகங்கள், சில தொலைக்காட்சிகளில் நாட்டு வெடிகுண்டு என தவறான செய்தி பரவிக் கொண்டுள்ளது முற்றிலும் தவறான ஒன்று.

கோவில் திருவிழாக்களில் பயன்படுத்தப்படும் நாட்டு பட்டாசு தான் வீசப்பட்டுள்ளது, ஒரு மாணவரை அங்கேயே கைது செய்துள்ளோம். மற்றொரு மாணவரை தேடி வருகின்றோம். ஏற்கனவே நடைபெற்ற முன்விரோதம் காரணமாக இன்றைக்கு மோதல் ஏற்பட்டுள்ளது. திருவிழாக்களில் பயன்படுத்தப்படும் பட்டாசை வெடிக்க வைத்து விட்டு தப்பி ஓடி உள்ளனர்.

காவலாளியின் உதவியுடன் ஒரு மாணவரை பிடித்து விட்டோம். தப்பி ஓடிய மற்றொரு மாணவரை தேடி வருகின்றோம். இரண்டு தரப்பினரும் மாணவர்கள் யார் பெரியவர்கள் என்பதில் பயத்தை காண்பிக்கவே இந்த நிகழ்வு நடந்துள்ளது.காவல்துறை எப்போதும் கல்லூரிகளில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

ஒவ்வொரு தடவை கல்லூரி மாணவர்கள் ரகளையில் ஈடுபடும்போது கல்லூரிக்கு தகவல் அளிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. முன்பை பார்க்கும்போது தற்போது குற்றங்கள் குறைந்துள்ளன. இது போன்ற சம்பவங்களில் மாணவர்கள் தொடர்ந்து ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.

Also Read: தலைமைப்பண்பு குறித்து தோனியிடம் இருந்து கற்றுக்கொண்டது இதுதான் -மனம் திறந்த ருத்துராஜ் கெய்க்வாட் !