Tamilnadu

பொது இடங்களில் இருந்த சாதிய அடையாளங்கள் அழிப்பு.. கிராம மக்களின் செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு !

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் சின்னதுரை என்ற மாணவரை கடந்த சில நாட்களுக்கு முன்னர் 6 பேர் கொண்ட மாணவ கும்பல் வீட்டுக்குள் நுழைந்து அவரை தாங்கள் கொண்டு வந்த அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தின் போது அதனை தடுக்கமுயன்ற சின்னத்துரையின் தங்கை சந்திராவையும் அந்த கும்பல் வெட்டியுள்ளது.

அதனைத் தொடர்ந்து இருவரும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விசாரணையில், சாதிய பாகுபாடு காரணமாக சின்னதுரையுடன் படிக்கும் சக மாணவர்களே இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு 6 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் தென்மாவட்டங்களில் நிலவிய சாதிய மோதலை வெளிப்படுத்துவதாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறை சார்பில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில், சமுதாய பிரதிநிதிகள் பங்கேற்ற சமூக நல்லிணக்க கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சாதி வெறியை தூண்டும் சாதி அடையாளங்களை பொதுஇடங்களில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் சாதியால் பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சனைகளும் எடுத்துக்கூறப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தின் சிங்கத்தாகுறிச்சி மற்றும் காசிலிங்காபுரம் கிராமங்கள் மற்றும் சவலாப்பேரி போன்ற கிராமங்களில் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து அழித்துள்ளனர். பொதுமக்களின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Also Read: மணிப்பூரில் தொடரும் கலவரம்: 3 இளைஞர்கள் சுட்டுக்கொலை.. ராணுவம் திரும்பபெறப்பட்ட நிலையில் நடந்த வன்முறை !