Tamilnadu

“அரசின் திட்டங்கள் முறையா வருதா?” : மீனவர் குடியிருப்புக்கு நேரில் சென்று முதலமைச்சர் ஆய்வு!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17.8.2023) இராமநாதபுரத்திலிருந்து இராமேஸ்வரம் செல்லும் வழியில், இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் வட்டம், பாம்பன் ஊராட்சி, அக்காள்மடம் மீனவர் குடியிருப்பு பகுதிக்கு நேரில் சென்று, அங்குள்ள மீனவர் குடும்பத்தினருடன் கலந்துரையாடினார். 

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் நாளை (18.8.2023) நடைபெறவுள்ள தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் மற்றும் மீனவ சங்கங்கள் இணைந்து நடத்தும் மீனவர் நல மாநாடு மற்றும் மீனவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக இராமநாதபுரத்திலிருந்து இராமேஸ்வரம் செல்லும் வழியில், அக்காள்மடம் மீனவர் குடியிருப்பு பகுதிக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் சென்று மீனவப் பெருமக்களிடம் அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது, அப்பகுதி மக்கள் குடியிருப்பு பட்டா வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். பட்டா வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்தார்.

மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்து இருக்கிறீர்களா என்று அங்குள்ள பெண்களிடம் கேட்டறிந்தார். அத்துடன் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் பெற்றுக் கொண்டார்.  தமிழ்நாடு முதலமைச்சர், அக்காள்மடம் மீனவர் குடியிருப்பு பகுதியில் உள்ள மாணவச் செல்வங்களுடன் கலந்துரையாடி, அவர்களது படிப்பு விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

Also Read: அரசுப் பள்ளிக்கு ரூ1 கோடி நிதி.. மதுரை சென்ற முதலமைச்சர் நேரில் அழைத்து பாராட்டு : யார் இந்த ராஜேந்திரன்?