Tamilnadu

மணிப்பூர் கொடூரம்.. வாய் திறக்காமல் அமைதிகாக்கும் அ.தி.மு.க : வெளுத்து வாங்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை அடுத்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "சமூக பாதுகாப்பு திட்டம் வாயிலாக வழங்கப்படும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட ஓய்வூதியங்கள் தற்போது வழங்கப்படும் ரூ.1000லிருந்து ரூ. 1200 ஆக அதிகரிக்கப்படுகிறது.

இந்திராகாந்தி தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் கைம்பெண்கள் , ஆதரவற்றோர் , கணவனால் கைவிடப்பட்டோர் , 50 வயதுக்கு மிகாமல் திருமணமாகாத ஏழைப் பெண்கள் மற்றும் இலங்கையிலிருந்து வந்தோருக்கு ஓய்வூதிய திட்டங்கள் தற்போது ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களில் மாற்றுத்திறனாளிகளின் ஓய்வூதியம் ஏற்கனவே ரூ.1500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் முதியோர் பாதுகாப்பு திட்டம் உட்பட அனைத்து சமூகப் பாதுகாப்பு திட்டங்களின் கீழ் இருப்போருக்கும் ஓய்வூதியம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. சமூகப் பாதுகாப்பு திட்டங்களின் கீழ் மொத்தம் 30 லட்சத்து 55 ஆயிரத்து 857 பயனாளிகள் மாதாந்திர ஓய்வூதியம் பெறுகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் 1200 ஆக ஓய்வூதியம் உயர்த்தப்படுகிறது.

மேலும் 74 லட்சத்து 73 நபர்கள் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்துக் காத்திருப்போர் பட்டியலில் இருக்கின்றனர் , அவர்களில் தகுதியானோருக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும். ஓய்வூதிய அதிகரிப்பின் காரணமாக ஆண்டுக்கு 845.91 கோடி கூடுதல் செலவினம் அரசுக்கு ஏற்படும்.

கைத்தறித் துறை , தொழிலாளர் நலத்துறையின் கீழ் உள்ள 18 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் 1.34 லட்சம் பயனாளிகள் பயன்பெறுவர். கட்டட தொழிலாளர் வாரியத்தில் இருப்போருக்கும் ஓய்வூதிய உயர்வு பயன் தரும்.

தற்போது வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தில் 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு 300 ரூபாயையும் , அதற்குக் கீழ் உள்ள வயதினருக்கு 200 ரூபாயையும் ஒன்றிய அரசும் மீதி தொகை மாநில அரசும் வழங்குகிறது.

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக மொத்தம் 3 கட்டமாகச் சிறப்பு முகாம் நடைபெறும். இதில் முதல்கட்டமாக 21 ஆயிரத்து 31 முகாம்கள் நடைபெற்று வருகின்றன. 35, 925 முகாம்கள் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. ஏறத்தாழ 50 லட்சம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதி வாய்ந்த ஒரு பயனாளியும் விடுபட்டு விடக் கூடாது என்பதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளார்.

மணிப்பூரில் நடந்து வரும் கொடூரங்கள் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. பலரும் ஒன்றிய அரசைக் கண்டித்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் தொடர்ந்து கண்டன குரல் எழுப்பி வருகின்றனர். பிரதமர் மோடி விளக்கம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் மணிப்பூர் விவகாரத்தில், நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை என்று கூறும் எடப்பாடி பழனிசாமி எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. இந்த விவகாரத்தில் அ.தி.மு.க இரட்டை வேடம் போடுகிறது. மணிப்பூரில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பு குறித்துத் தேவைப்பட்டால் முதலமைச்சர் தேவையான நடவடிக்கையை எடுப்பார்" என தெரிவித்துள்ளார்.

Also Read: மணிப்பூர் கலவரத்தின் பின்னணியில் RSS.. முன்னணியில் இந்துத்துவ அமைப்புகள்- எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி