Tamilnadu

அரசு ஊழியரின் சாதியை இழிவாக குறிப்பிட்டு கொலை மிரட்டல்.. அதிமுக முன்னாள் MLA தம்பி மீது வழக்குப்பதிவு !

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பெரணமல்லூர் ஊராட்சியில் ஓன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்கி வருகின்றது. இங்கு வட்டார வளர்ச்சி அலுவலராக வெங்கடேசன் என்பவர் பணியாற்றி வருகிறார்.

பெரணமல்லூர் ஒன்றியத்தில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ அன்பழகன் சகோதரர் அறிவழகன் (எ) ஜவகர் என்பவர் அதிமுகவில் நகர துணை செயலாளராக பதவி வகித்து வருகின்றார். அவர் சார்பில் கட்சி போஸ்டர் ஒன்று பெரணமல்லூர் அரசு ஓன்றிய அலுவலகம் வளாகத்தில் ஒட்டப்பட்டுள்ளது.

ஆனால், அரசு அலுவலங்களில் போஸ்டரை ஓட்டக்கூடாது என்று அரசு அதிகாரிகள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர். மேலும் மறுநாள் அரசு ஊழியர்களால் அந்த போஸ்டர் கிழிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அறிவழகன் மீண்டும் அதே இடத்தில் போஸ்டர் ஒட்டியுள்ளார்.

இதனை அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் அறிவழகனை போனில் தொடர்புகொண்டு ஏற்கனவே அறிவுறுத்தியும், அரசு அலுவலங்களில் ஏன் மீண்டும் மீண்டும் போஸ்டர் ஒட்டுகிறீர்கள் ? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், அதற்கு அதிமுவை சேர்ந்த அறிவழகன், என் போஸ்ட்டரை தொட்ட எவனா இருந்தாலும் வெட்டுவேன் என்று கூறியதோடு சாதியை குறிப்பிட்டு இழிவாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த ஆடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் இச்சம்பவம் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் மற்றும் வேளாண்மை இணை இயக்குநர் கோவிந்தராஜ் ஆகியோர் தனித்தனியாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். 2 புகாரை பெற்ற போலீசார் 5 பிரிவின் கீழ் வழக்கு பதிந்து தலைமறைவான அதிமுக முன்னாள் எம்.எல்.ஏஅன்பழகனின் சகோதரரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Also Read: ஆளுநர் RN ரவி அந்தப் பதவிக்கு தகுதியற்றவர்.. - குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் !