Tamilnadu

பிறந்த குழந்தையை ஏரியில் வீசிய கொடூர தாய்.. கைது செய்து விசாரிக்கையில் கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி !

சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்தவர் சங்கீதா. 27 வயதான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இளைஞர் ஒருவருடன் திருமணமானது. இந்த தம்பதிக்கு 2 வயதில் பெண் குழந்தை இருக்கும் நிலையில், கார்த்திக் அந்த பகுதியில் வேலை பார்த்து வருகிறார். இருவருக்கும் பெற்றோர் யாரும் இல்லாத நிலையில், அவர்கள் தங்கள் குழந்தையோடு வசித்து வந்துள்ளனர்.

இந்த சூழலில் சங்கீதாவுக்கு அதே பகுதியில் இருக்கும் நபருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஆரம்பத்தில் சாதாரணமாக நட்பு ரீதியாக பழகி வந்த நிலையில், அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனால் சங்கீதா தனது கணவருக்கு தெரியாமல் அடிக்கடி இவரை தனிமையில் சந்தித்து வந்துள்ளார். இவர்கள் சந்திப்பு அடுத்தகட்டத்துக்கு செல்லவே, சங்கீதா கர்ப்பமுற்றார்.

சில மாதங்களுக்கு பிறகே தான் கர்ப்பமுற்றத்தை அறிந்ததால் அதனை கலைக்க முடியாத சூழல் ஏற்பட்டது. எனவே வேறு வழியில்லாமல் அவர் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்தார். நாளடைவில் வயிறு பெரிதாகவே, தான் வேலை செய்யாமல் சாப்பிட்டு தூங்குவதால் தொப்பை போட்டு விட்டதாக தெரிவித்தார். இப்படியே தனது கணவரை ஏமாற்றி வந்த இவருக்கு கடந்த ஞாயிற்று கிழமை கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் மருத்துவமனைக்கு செல்லாத அவர், தனக்கு தானே கழிவறையில் பிரசவம் பார்த்துக்கொண்டார். அப்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. எங்கே தனக்கு குழந்தை பிறந்த விவகாரம் குறித்து தனது கணவருக்கு தெரிந்து விட்டால் பிரச்னை ஆகி விடும் என்பதால், நன்றாக இருந்த அந்த குழந்தையை கொலை செய்ய எண்ணியுள்ளார்.

அதன்படி தனது வீட்டுக்கு சிறிது தொலைவில் சசிநகா் அருகே உள்ள ஏரியில் தூக்கி வீசிவிட்டு சென்று விட்டார். சில மணி நேரங்கள் கழித்து அந்த பகுதி வாசிகள், சடலமாக கிடக்கும் அந்த குழந்தையை பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த அவர்கள் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்ததோடு, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அந்த குழந்தையின் தாய் சங்கீதா என்று தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் விசாரிக்கையில் இந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த விவகாரம் அறிந்த கணவர் பெரும் அதிர்ச்சியில் உள்ளார். ரகசிய காதலால் பிறந்த குழந்தையை ஏரியில் வீசி கொன்ற கொடூர தாயின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: Instagram-ல் பழக்கம்.. கல்லூரி மாணவரை கடத்திய ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய சிறுமி: அதிர்ச்சி சம்பவம்!