Tamilnadu

'முதலமைச்சர் கோப்பை - 2023'.. மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

சென்னையில் நடந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் கோப்பை என்ற விளையாட்டுப் போட்டியினை அறிவித்து, அதில் கபடி, சிலம்பம் உட்பட 15 விளையாட்டுகள் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்படும் என அறிவித்திருந்தார்

அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் 3.70 லட்சத்திற்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மாவட்ட அளவிலான நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற 27000-க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளத் தேர்வு செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னையில் 17 இடங்களில் வரும் ஜூலை 01ம் தேதி முதல் ஜூலை மாதம் 25-ந்தேதி வரை 'முதலமைச்சர் கோப்பை' மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.

இதில் 38 மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்-வீராங்கனைகளின் அணி வகுப்பு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஒலிம்பிக் தடகள வீராங்கனை செல்வி ரேவதி மற்றும் சர்வதேச வாலிபால் வீரர் வைஷ்ணவ் ஆகியோர் முதலமைச்சர் கோப்பை ஜோதி சுடரினை ஏந்தி வர, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஜோதி சுடரினை ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து ஒலிம்பிக் வீராங்கனை செல்வி சுபா போட்டிக்கான உறுதிமொழியை வாசிக்க இதர வீரர்கள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். பின்னர் மாநில அளவில் நடைபெறும் முதலமைச்சர் கோப்பை 2023 விளையாட்டுக்கான வெற்றிக்கோப்பை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.

தொடக்க விழாவிற்கு முன்னதாக தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். முதலமைச்சர் கோப்பைக்காண கையெழுத்து பலகையில் "களம் நமதே, வாழ்க கலைஞர் புகழ்" என குறிப்பிட்டு, கையெழுத்திட்டு இருந்தார். அதன்பின் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியின் ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்த வீரருக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

Also Read: ”அமைச்சரை நீக்கும் அதிகாரம் உங்களுக்கு இல்லை”: ஆளுநருக்கு முதல்வர் எழுதிய கடிதத்தின் 10 முக்கிய சாராம்சம்