Tamilnadu

”தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உருவாகும்”.. அமைச்சர் தா.மோ.அன்பரசன் உறுதி!

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் சிறு குறு தொழில்துறை சார்பில் "பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நாள் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட அளவில் சிறந்த சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கான விருதுகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், " தி.மு.க அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சமச்சீரான தொழில் வளர்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வழங்கப்பட்டு வந்த கடனுதவி ரூ. 74.98 கோடியிலிருந்து ரூ.105 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போன்று டெல்டா மாவட்டங்களில் ரூ.16.29 கோடி அளவிலிருந்த கடனுதவி ரூ.39.88 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஆட்சி பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் 7,926 புதிய தொழில் முனைவோர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கடந்த 2 ஆண்டுகளில் 23,188 இளைஞர்கள் புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கியுள்ளனர். இதில் மகளிர், பட்டியலினத்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 10,805 சமூகத்தில் பின் தங்கிய இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக உருவாகியுள்ளனர். இதில் 6793 மகளிர்கள் 2422 பட்டியலினத்தார்கள் 1590 மாற்றுத்திறனாளிகள் அடங்குவர்.

தமிழ்நாட்டில் பின் தங்கிய மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்திடத் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: ”தொழிற்துறையில் சமச்சீர் வளர்ச்சிக்கு வித்திட்டவர் கலைஞர்”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!