Tamilnadu

”விளையாட்டுதுறையின் கேப்டன் அமைச்சர் உதயநிதி”.. புகழாரம் சூட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் 12.06.2023 அன்று சர்வதேசஸ்குவாஷ் போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். இச்சர்வதேசஸ்குவாஷ் போட்டி 13.06.2023 முதல் 17.06.2023 வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில், இந்தியா, ஹாங்காங் - சீனா, ஜப்பான், மலேசியா, எகிப்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் கொலம்பியா ஆகிய 8 நாடுகளைச் சேர்ந்த 32 தலைசிறந்த ஸ்குவாஷ் வீரர்கள் பங்கேற்றனர்.

இந்திய அணியில் ஜோஷ்னா சின்னப்பா, தன்வி கன்னா சவுரவ் கோசல் மற்றும் அபய் சிங் ஆகிய முன்னணி வீரர்கள் பங்கேற்றனர். இந்தப் போட்டியானது 12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் நடத்தப்படுவது சிறப்புக்குரியது.

இதையடுத்து இன்று சர்வதேச ஸ்குவாஷ் போட்டி நிறைவடைந்தது. சர்வதேச ஸ்குவாஷ் போட்டியில் முதல் இடம் வென்ற எகிப்து அணிக்கு தங்க கோப்பையும், இரண்டாம் இடம் வென்ற மலேசியா அணிக்கு வெள்ளி கோப்பையும், மூன்றாம் இடத்தை வென்ற இந்தியா மற்றும் ஜப்பான் அணிகளுக்கு வெண்கல கோப்பையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி அவர்கள், இதுபோன்ற போட்டிகளை தனிப்பட்ட சம்மேளனங்கள் நடத்தும் போட்டிகளாக அல்லாமல் அரசு நடத்தும் போட்டிகளைப் போலவே உதவிகளை செய்து வருகிறார்.

விளையாட்டுத் துறையின் கேப்டனாக இருந்து அனைத்து வகை விளையாட்டு வீரர்களையும் சாம்பியன்களாக ஆக்கிக் கொண்டு இருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள். அவருக்கும் அவரது துறையைச் சார்ந்த உயரதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

உலகின் முன்னணி ஸ்குவாஷ் வீரர்கள் கலந்துகொண்டுள்ள இந்த ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டியில், இந்திய அணியில் 4 வீரர்களில் 3 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் சென்னையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அகாடமியில் தமிழ்நாடு ஸ்குவாஷ் ராக்கெட் சங்கத்தால் பயிற்சி பெற்றவர்கள் என்பதும் பெருமைக்குரிய ஒன்று.

நமது மாநிலம் தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்களில் 80 நபர்களைக் கொண்டு பலம் பெற்றுள்ளது. நமது மாநிலத்தில் ஸ்குவாஷ் துறையில் 5 அர்ஜுனா விருதுபெற்றவர்களும், பத்மஸ்ரீ விருது பெற்ற ஒருவரும் உள்ளனர்.

நம் மாநிலத்தின் முன்னணி ஸ்குவாஷ் வீரர்களான ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிக்கல், சவுரவ் கோஷல் மற்றும் அபய் சிங் ஆகியோர் தமிழ்நாட்டின்விளையாட்டு வீரர்களுக்கு மிகுந்த ஊக்கமளிப்பவர்களாக உள்ளனர்.

ஒருபுறம் துவக்க நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களையும், மறுபுறத்தில் விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களையும் ஊக்குவிக் நமது அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது" என தெரிவித்துள்ளார்.

Also Read: ” 80 ஸ்குவாஷ் சாம்பியன்களை உருவாக்கிய ஒரே மாநிலம் தமிழ்நாடு”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமித பேச்சு!