Tamilnadu

”வலியும் தியாகமுமே அவரை உயர்த்தியுள்ளது”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் புகழாரம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது 70 ஆண்டுகால பொது வாழ்க்கை பயணங்களைத் தமிழ்நாடு முழுவதும் புகைப்பட கண்காட்சியாக வைக்கப்பட்டு வருகிறது.

முதலில் சென்னையில் முதலமைச்சரின் 70 ஆண்டுகால வாழ்க்கை பயணத்தை எடுத்துக்கூறும் வகையில் 'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சி பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்ற வளாகத்தில் கடந்த மாதம் 28-ம் தேதி நடிகர் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்.

13 நாட்கள் நடந்த இந்த கண்காட்சியில் அரசியல் தலைவர்கள், பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் சினிமா பிரபலங்கள் என பலரும் பார்வையிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்து வந்த பாதையைக் கண்டு நெகிழ்ச்சியடைந்தனர்.

இதையடுத்து மதுரை, கோவை போன்ற மாநகரங்களிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்த வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சிகள் அமைக்கப்பட்டது. இக்காட்சியைப் பொதுமக்கள் பார்வையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில்"எங்கள் முதல்வர் எங்கள் பெருமை"என்ற புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் 400க்கும் மேற்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் "எங்கள் முதல்வர் எங்கள் பெருமை"என்ற புகைப்பட கண்காட்சியை இன்று நடிகர் சிவகார்த்திகேயன் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சிவகார்த்திகேயன், "மிகப்பெரிய ஆளுமை கொண்ட தலைவரின் மகனாக இருந்தாலும் நிறைய வலிகளையும், தியாகங்களையும் தாண்டி சாதனைகளைப் புரிந்துதான் முதலமைச்சராக தற்போது நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர்ந்திருக்கிறார் என்பது இந்த கண்காட்சி மூலம் தெரிகிறது.

மேலும் மிகப்பெரிய உயரங்களை அடைவதற்குப் பல வலிகளையும், தியாகங்களையும் தாண்டி வர வேண்டும் என்பதை இந்த புகைப்பட கண்காட்சி நமக்கு உணர்த்துகிறது. இங்கு உள்ள முதலமைச்சரின் குழந்தை படம் தன்னை வெகுவாக கவர்ந்தது" என தெரிவித்துள்ளார்.

Also Read: ”தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருப்பது பெருமையாக உள்ளது”.. பி.சி.ஸ்ரீராம் பாராட்டு!