Tamilnadu

” திரையரங்கில் நடைபெற்ற தீண்டாமை செயல் கண்டிக்கத்தக்கது”.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!

சிலம்பரசன் நடிப்பில் நேற்று வெளியாகியுள்ள படம்தான் 'பத்து தல'. ஓபிலி என். கிருஷ்ணா இயக்கியுள்ள இந்த படத்தில் சிம்பு, கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன், ரெடின் கிங்ஸ்லி, டிஜே அருணாசலம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நேற்று சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி தியேட்டரில் ரசிகர்களோடு ரசிகர்களாக குறவர் சமூகத்தை சார்ந்த பெண் ஒருவர் தனது பிள்ளைகளை கூட்டி படத்திற்கான டிக்கெட் எடுத்து பத்து தல படம் பார்க்க வந்தார்.

அவர் உள்ளே செல்வதற்காக நின்றபோது, அங்கிருந்த திரையரங்கு ஊழியர் டிக்கெட்டை பெற அவர்களை உள்ளே செல்ல மறுத்துள்ளார். மேலும் அவரை உள்ளே விட முடியாது என்றும் கறாராக நடந்துகொண்டார்.

ஊழியரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து அங்கிருந்த ரசிகர்கள் குரலெழுப்பினர். இருப்பினும் அந்த ஊழியர் அவர்களை உள்ளே விட மறுத்தார். அதோடு அவர்களிடம் இருந்து டிக்கெட்டையும் வாங்காமல் வெளியவே நிற்க வைத்து சாதிய வேறுபாடு காட்டினார். இதனைத்தொடர்ந்து ஊழியரின் இந்த நடவடிக்கையை அங்கிருந்த ரசிகர்கள் தங்கள் மொபைல் போன்களில் வீடியோவாக எடுத்து சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டனர்.

இந்த வீடியோ வெளியாகி பலரும் ரோகிணி தியேட்டர் மற்றும் ஊழியருக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன், சூரி, ஜி.வி.பிரகாஷ் என பலரும் ரோணி தியேட்டரின் இந்த தீண்டாமை செயலுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் திரையரங்கில் நடைபெற்று இருக்கும் தீண்டாமை செயல் கண்டனத்திற்கு உரியது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "சென்னையில் உள்ள திரையரங்கில் நடைபெற்ற தீண்டாமை சம்பவம் மிகவும் கண்டனத்துக்குரியது. இது தொடர்பாக விசாரானை நடைபெற்று வருகிறது.அரசும் விளக்கம் கேட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க உள்ளேன்" என தெரிவித்துள்ளார்.

Also Read: Stalinism என்றால் என்ன?.. MLA-க்களுக்கு சட்டப்பேரவையில் பாடம் எடுத்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி!