Tamilnadu

instagramல் ரீல்ஸ் வீடியோ வெளியிட 8 விலை உயர்ந்த பைக் திருடிய வாலிபர்கள்.. போலிஸில் சிக்கியது எப்படி?

சென்னை கீழ்ப்பாக்கம் புல்லா புரத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வேலை முடித்துவிட்டு தனது வீட்டின் அருகே விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். பிறகு அடுத்தநாள் காலை வெளியே வந்து பார்த்தபோது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் காணாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இவரைப் போன்ற பலரும் தங்களது விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் காணவில்லை என்ற புகார் காவல்நிலையத்தில் குவிந்துள்ளது. பின்னர் கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கோபி உத்தரவின் பேரில், உதவி ஆணையர் துரை மற்றும் கீழ்பாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளர் சாம் வின்சன்ட் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

பின்னர், இருசக்கர வாகனம் திருடு போன வழக்கு தொடர்பான இடங்களிலிருந்த சி.சி.டி.வி காட்சிகளை போலிஸார் ஆய்வு செய்தனர். அப்போது ஒரே நபர்கள்தான் வாகனங்களைத் திருடியது என்று தெரிந்தது.

மேலும் தீவிரமாக விசாரணை நடத்தியதில், ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன், சூளை பகுதியைச் சேர்ந்த சோமேஷ் ஆகிய இருவரும் தான் இருசக்கர வாகனத்தைத் திருடியது என்பது உறுதியானது. பிறகு இருவரையும் போலிஸார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து 8 வாகனங்களை போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில், youtube மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோவை போடுவதற்காக இவர்கள் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை திருடியதாக வாக்குமூலம் அளித்தனர். மேலும் பாலமுருகன் உணவு டெலிவரி நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்துக் கொண்டே வாகனங்களைத் திருடிவந்துள்ளார்.

அதேபோல், இவர்கள் திருடிய வாகனங்களை நண்பர்கள் பயன்படுத்தி வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து யார் அவர்கள் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Also Read: சவூதி அரேபியா TO மலேசியா.. நடு வானில் பயணிக்கு மாரடைப்பு: சென்னையில் அவசரமாகத் தரையிறங்கிய விமானம்!