Tamilnadu

முன்பதிவு பெட்டியில் டிக்கெட் இல்லாமல் ஏறி அட்டகாசம் செய்த கும்பல்.. திருச்சி ரயில் நிலையத்தில் பரபரப்பு!

தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னேறிய தொழில் வாய்ப்புள்ள மாநிலமாக இருப்பதால் ஏராளமான வடமாநிலத்தவர் தமிழ்நாட்டுக்கு வேலை தேடி வருகின்றவர். தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர் முக்கிய பண்டிகைகளுக்கு தங்கள் மாநிலத்துக்கு செல்வத்தையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

அப்படி தங்கள் மாநிலத்துக்கு செல்ல பெரும்பாலும் அவர்கள் ரயில் போக்குவரத்தையே பயன்படுத்துகின்றனர். அதில் சிலர் முன்பதிவில்லாத பெட்டியில் பயணம் செய்யாமல் முன்பதிவு பெட்டியில் ஏறி பயணம் செய்யும் நிகழ்வு அடிக்கடி நடந்து வருகிறது. இதன் காரணமாக ரயிலில் முன்பதிவு செய்திருப்பவர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

அதிலும் கடந்த சில மாதங்களாக முன்பதிவு பெட்டியில் பயணம் செய்யும் வடமாநிலத்தவரால் முன்பதிவு செய்தவர்கள் பாதிக்கப்பட்டு அவர்கள் ரயில்வே போலிசாரிடம் புகார் அளிப்பதும், இதனால் வடமாநிலத்தவர்கள் நடுவழியில் இறக்கிவிடப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கன்னியாகுமரியில் இருந்து திருச்சி வழியாக ஹவுராவுக்கு செல்லும் விரைவு ரயிலில் டிக்கெட் எடுக்காமல் முன்பதிவு பெட்டியில் வடமாநில கும்பல் பயணம் செய்ய முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு வழக்கம்போல நேற்று வந்துள்ளது.

அப்போது முன்பதிவு செய்யாமல் முன்பதிவு பெட்டியில் ஏராளமான வடமாநிலத்தவர்கள் ஏறியதோடு அல்லாமல் முன்பதிவு இருக்கையில் அமர்ந்து முன்பதிவு செய்தவர்களுக்கு கடும் சிரமத்தை கொடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த முன்பதிவு செய்த பயணிகள் வடமாநிலத்தவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த தருணத்தில் ரயில் புறப்பட்ட நிலையில், பயணிகள் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். அதன்பின் அங்கு ரயில்வே காவலர்கள் மற்றும் டிக்கெட் பரிசோதககர்கள் வந்தநிலையில், அவர்களிடம் முன்பதிவு செய்த பயணிகள் இதுதொடர்பாக புகார் அளித்தனர். பின்னர் முன்பதிவு செய்யாத வடமாநிலத்தவர்கள் முன்பதிவு பெட்டியில் இருந்து இறக்கிவிடப்பட்டனர்.

இதனால் சுமார் ஒருமணி நேரம் ரயில் தாமதமாக திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது. ரயிலின் முன்பதிவு பெட்டிகளில் இதுபோல முன்பதிவு செய்யாதவர்கள் ஏறி செல்வது சமீப காலமாக அதிகரித்துள்ள நிலையில், இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பயணிகள் ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: "இது எங்கள் நிலம்.. நாங்கள் ஏன் இந்தியில் பேசவேண்டும் ?" - இணையத்தில் வைரலாகும் ஆட்டோ ஓட்டுநரின் பதிலடி !