Tamilnadu

தாய விளையாட்டில் தோல்வி - நண்பனை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை - நீதிபதி அதிரடி!

சென்னை நொச்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகர். இவர் அப்பகுதியில் தாயம் விளையாடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். முன்னதாக அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவருடன் தனசேகர் தாயம் விளையாடியுள்ளார். அப்போது, ஆனந்தனை தனசேகர் என்பவர் தோற்கடித்துள்ளார்.

சில நாட்கள் கழித்து மீண்டும் தனசேகர் ஆனந்தனை சந்தித்துள்ளார். இருவரும் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்தி சென்றுள்ளனர். அப்போது பேசிக்கொண்டிருக்கையில், தாய விளையாட்டில் தோற்றது தொடர்பாக இருவரும் கிண்டல் அடித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரத்தில் தனசேகரை ஆபாச வார்த்தைகளால் திட்டிய ஆனந்தன், கத்தரிக்கோலால் மார்பின் இடது பக்கத்தில் குத்தியுள்ளார். அங்கிருந்து ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தனசேகர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற சம்பவம் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஆனந்தன் கைது செய்யப்பட்டார். இத்தொடர்பான வழக்கு சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எல்.அப்ரஹாம் லிங்கன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் அரசு வழக்கறிஞர் என்.ஜெய்சங்கர் ஆஜரானார். இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட ஆனந்தனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

Also Read: “இந்தியாவின் மொத்த கல்வியறிவு பெற்றவர்கள் 74%.. தமிழ்நாட்டில் மட்டும் 80%”: அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சு