Tamilnadu

புதிய பொறுப்பு.. அன்பில் பொய்யாமொழிக்கு மரியாதை செய்த அமைச்சர் உதயநிதி : அன்பில் மகேஸ் நெகிழ்ச்சி பதிவு!

தி.மு.க இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சரவையில் 35 வது அமைச்சராக இன்று பதவியேற்றார். ஆளுநர் ஆர்.என்.ரவி உதயநிதி ஸ்டாலினுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இதையடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மேடையிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் வாழ்த்து பெற்றார். இந்த பதவியேற்பு விழாவில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாற்றுக் கட்சித் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

புதிதாக அமைச்சராகப் பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் கட்சித் தலைவர் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழ்நாடு முழுவதும் தி.மு.க தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

அமைச்சராகப் பதவியேற்ற உடன் உதயநிதி ஸ்டாலின் அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினார். பிறகு அங்கிருந்து தலைமைச் செயலகம் வந்தார். அங்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையில் அமர்ந்து தனது பணிகளை தொடங்கினார்.

இதனிடையே மறைந்த மூத்த கட்சி நிர்வாகி அன்பில் பொய்யாமொழியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். மேலும், அன்பில் பொய்யாமொழியின் மனைவியும் தனது நண்பரும் சக அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் தாயாரையும் சந்தித்து ஆசி பெற்றார்.

இது குறித்த புகைப்படத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தனது முகநூல் பக்கத்தின் பகிர்ந்து

"முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து

அகநக நட்பது நட்பு" என்ற திருக்குறள் வாசகத்தையும் பகிர்ந்துள்ளார்.

Also Read: அன்று மு.க ஸ்டாலின்-இன்று உதயநிதி: இருவரையும் முதல் முதலாக அமைச்சர் இருக்கையில் அமரவைத்தது யார் தெரியுமா?