Tamilnadu

“அரசு அலுவலகங்களில் தூய்மைப் பணியாளர்களுக்கு தனி ஓய்வறை..” - மாவட்ட ஆட்சியர்களுக்கு இறையன்பு கடிதம் !

அனைத்து அரசு அலுவலகங்களிலும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஓய்வறை அமைக்க தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். அரசு மருத்துவமனைகளிலும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஓய்வறை அமைப்பது அவசியம் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறித்தியுள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு இறையன்பு எழுதியுள்ள கடிதத்தில், "எழில்மிகு அரசு அலுவலகம் என்ற சூழலை உருவாக்க அரசு அலுவலகங்களில் செலவின்றி மேற்கொள்ளப்பட வேண்டிய எளிமையான பணிகளைத் தெரிவித்து செயல்படுத்த கேட்டுக்கொண்டற்கிணங்க அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் மிக நேர்த்தியான முறையில் செயல்படுத்தி முந்தைய நிலையை தற்போதைய நிலையையும் நிழற்படங்களுடன் கூடிய அறிக்கையை அனுப்பி வைத்தமைக்கு எனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல, நாம் அமர்ந்து பணியாற்றும் அரசு அலுவலகங்களையும் உபயோகப்படுத்தும் ஓய்வு அறைகளையும் நாள்தோறும் தூய்மைப்படுத்தி துலங்கசெய்யும் தூய்மைப் பணியாளர்கள் அமர்ந்து இளைப்பாறவும், மதிய வேளைகளில் உணவருந்தவும் நீர்ப் பருகவும் போதிய வசதிகளைச் செய்து தருமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் தனி கவனம் செலுத்தி தூய்மைப்பணியாளர்களுக்கு செய்து கொடுத்த வசதிகளை ஆவணப்படுத்தி நிழற்படங்களுடன் கூடிய அறிக்கையை விரைந்து சமர்ப்பித்தமைக்கு எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேற்சொன்ன வசதிகள் தங்கள் அலுவலகத்தோடு நில்லாமல் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் இதர அரசு துணை அலுவலகங்களில் செயல்படுத்தும் முகத்தான் நேரடியாக தலையிட்டு தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் எழில்மிகு அரசு அலுவலகமாக திகழவும் அவ்வலுவலகத் தூய்மைப் பணியாளர்கள் அமர்ந்து இளைப்பாறவும் உணவருந்தவும் போதிய வசதிகளை அந்தந்த அரசு அலுவலகத் தலைமை அலுவலர்கள் மூலம் செய்து கொடுப்பதை உறுதி செய்து ஆவணப்படுத்தி நிழற்படங்களுடன் ஒர் அறிக்கை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் பொது மக்களுக்கான ஓய்வறைகள் (Toilets) இல்லாத அரசு அலுவலகங்களில் அதனை உடனடியாக ஏற்படுத்தி ஓய்வறைகளே இல்லாத அரசு அலுவலகங்கள் இல்லை என்ற சூழலை உருவாக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து ஆவணப்படுத்தி நிழற்படங்களுடன் கூடிய அறிக்கையை அரசுக்கு விரைந்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read: "என்னை இப்படி கூப்பிட்டால்.. " - மேடையில் செருப்பை காட்டி ஆவேசமாக பேசிய பவன் கல்யாண் !