Tamilnadu

“அவள் காதலை ஏற்கவில்லை..” : மாணவி உயிரிழந்த வழக்கில் குற்றவாளி ‘பகீர்’ வாக்குமூலம் !

சென்னையை அடுத்த ஆலந்தூர் ராஜா தெரு காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் மாணிக்கம் (47). இவரது மனைவி ராம்லட்சுமி (43). இவர் ஆதம்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகள் சத்தியப்பிரியா (20). இவர் தி நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 3ம் ஆண்டு படித்து வருகிறார்.

சத்யபிரியாவை ஆலந்தூர் ராஜா தெருவில் வசிக்கும் ஒய்வு பெற்ற போலிஸ் அதிகாரி தயாளன் என்பவரது மகன் சதீஷ்(23) என்பவர் ஒருதலையாக காதலித்துள்ளார். மாணவி சத்யபிரியா காதலிக்க மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கல்லூரி செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்தில் தனது தோழியுடன் வந்த சத்யாவிடம் சதீஷ் தகராறு செய்துள்ளார்.

அப்போது ஆத்திரத்தில், தண்டவாளத்தில் தள்ளி விட்டதால் தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரயிலில் சிக்கி சத்தியா தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சதீஷ் அங்கிருந்து தப்பி ஒடிவிட்டான். இது தொடர்பாக மாம்பலம் ரயில்வே போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார் டிரைவரான மாணிக்கம் ரயில் நிலையத்தில் மகள் உடல் அருகே சோகமாகவே இருந்தார். போலிஸ் விசாரணை முடிந்து இரவு வீட்டிற்கு வந்தார். எதுவும் சாப்பிடாமல் சோகமாக இருந்த மாணிக்கத்திற்கு திடீரென அதிகாலை 3.30 மணிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.

உடனே அம்புலன்சில் சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில் தப்பி ஒடிய சதீஷ் கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றி கொண்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சதீஷை ரெயில்வே போலிஸார் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மகள் இறந்த சோகத்தில் தந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சதீஸிடம் போலிஸ் நடத்திய விசாரணையில், “உயிரிழந்த மாணவியை சிறுவயது முதலே எனக்கு தெரியும். சில நாட்களுக்கு பிறகு நாங்கள் அவர்கள் வசித்த குடியிருப்பு பக்கத்தில் உள்ள இடத்திற்கு குடிபெயர்ந்துவிட்டோம்.

பின்னர் மாணவி மீது காதல் ஏற்பட்டு, அவரிடம் தெரிவித்தபோது அவர் ஏற்கமறுத்து பெற்றோரிடம் கூறியதால் காவல்நிலையத்தில் என்னுடைய பெற்றோர் மீது என்மீது புகார் அளித்தனர். பின்னர் எந்த பிரச்சனையும் செய்யகூடாது என எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் சம்பவம், நடந்த அன்று அவரிடம் பேசுவதற்காக வந்தபோது, அவள் காதலை ஏற்கவில்லை என்பதால அவர் தண்டவாளத்தில் தள்ளிவிட்டேன். பின்னர் அங்கிருந்தவர்கள் துரத்தியதால், அங்கிருந்து தப்பித்து சென்றேன்” எனக் கூறியுள்ளார்.