Tamilnadu

குடிபோதையில் வாகனம் ஓட்டிய வாலிபருக்கு நூதன நிபந்தனையுடன் ஜாமீன்: நீதிமன்றம் சொன்ன உத்தரவு என்ன தெரியுமா?

சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் திலீபன். இவர் கடந்த மாதம் குடிபோதையில் ஆட்டோவை ஓட்டி, சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது மோதி விட்டு தப்பிச் சென்று விட்டதாக படுகாயம் அடைந்தவர்கள் போலிஸில் புகார் செய்தனர். இந்த புகாரின் அடிப்படையில், அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலிஸார் வழக்குப்பதிவு செய்து, திலீபனை கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.அருண், மனுதாரர் ஒரு அப்பாவி. இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் இருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டனர். கடந்த ஆகஸ்டு 23ந்தேதி முதல் மனுதாரர் சிறையில் உள்ளார் என்று வாதிட்டார்.

காவல்துறை தரப்பில் அரசு வழக்கறிஞர் ஆஜராகி, மனுதாரர் குடிபோதையில் ஆட்டோவை வேகமாக ஓட்டி சாலையில் நடந்த சென்ற 3 பொதுமக்கள் மீது மோதி படுகாயத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றுள்ளார். தற்போது படுகாயம் அடைந்தவர்கள் கடந்த 3ம் தேதி ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி விட்டனர் என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, மனுதாரருக்கு நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்குகிறேன், ரூ.25ஆயிரம், அதே தொகைக்கு இருநபர் உத்தரவாதத்தை கீழ் கோர்ட்டில் அளித்து, ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம்.

அதன்பின்னர் காலையிலும், மாலையிலும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். மேலும், 2 வாரங்களுக்கு அடையாறு எல்.பி.சாலையில் உள்ள சிக்னலில், குடித்து விட்டு வாகனம் ஓட்டாதீர் வாசகங்களை கொண்ட துண் பிரசுரத்தை வாகன ஓட்டிகளுக்கு காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையிலும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Also Read: "ஒன்றிய அரசின் மின்சார சட்டத் திருத்த மசோதா" - நஷ்டம் நாட்டுக்கு, லாபம் தனியாருக்கா ? - முரசொலி கேள்வி !