Tamilnadu

அரசு போக்குவரத்து கழக காலிப்பணியிடங்கள் எப்போது நிரப்படும் ?- அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விளக்கம் !

சென்னை, கிண்டியில் நடைபெற்ற மதிப்பீட்டாளர்கள் பயிலரங்கில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, "தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதனால் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இன்னும் தேவைப்படும் இடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேல்மருவத்தூர் வழித்தடத்தில் மாணவர் பேருந்திலிருந்து கீழே விழுந்த சம்பவத்தில் 106 பெண்கள் ஒரே நேரத்தில் ஏறியதால் மாணவர்கள் படியில் பயணம் மேற்கொண்டு விபத்து நிகழ்ந்துள்ளது. மதுரையில் ஒரு மாணவன் படிக்கட்டில் பயணம் செய்தபோது கீழே விழுந்து இறந்த சம்பவத்திற்கு பிறகு படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களை அங்கேயே நிறுத்தி இறங்கி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மாணவர்கள் பேருந்துகளில் படிக்கட்டில் பயணம் செய்வதை தடுப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மேலாண் இயக்குநர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

போக்குவரத்து கழகத்தில் உள்ள ஓட்டுநர், நடத்துநர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். காலிப்பணியிடங்கள் நிரப்பும் முறை குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நிறுத்தப்பட்ட பேருந்துகள் 75% பேருந்துகள் மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. டீசல் விலையை கடுமையாக உயர்த்தப்பட்ட போதிலும், அண்டை மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்ட போதிலும் மக்கள் நலன் கருதி பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை.

தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக 97 பேர் மட்டுமே புகார் அளித்துள்ள நிலையில் அவர்களுக்கான பணம் திரும்ப வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 21000 பேருந்துகள் இருக்கிறது; பண்டிகை காலங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதால் அரசு பேருந்துகளில் பொது மக்கள் பயணிக்க வேண்டும். அரசு பேருந்துகளை மக்கள் பயன்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

Also Read: இந்து யார்?, சனாதன தர்மத்தின் கொள்கை என்ன?: RTI மூலம் ஆளுநருக்கு 19 கேள்விகளை எழுப்பிய வழக்கறிஞர்!