Tamilnadu

கரையான அழிக்கத் தந்தை வைத்த தீயில் 13 வயது மகள் உடல் கருகி உயிரிழப்பு.. சென்னையில் நடந்த சோகம்!

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அசேன்பாட்ஷா. இவரது 13 வயது மகள் பாத்திமா. இவர்கள் வீட்டில் கரையான் தொல்லை இருந்து வந்துள்ளது. இதனால் அதை எப்படியாவது அழிக்க வேண்டும் என அசேன்பாட்ஷா நினைத்துள்ளார். இதையடுத்து தீ வைத்து கரையானை அழித்துவிடலாம் என அவர் முடிவு செய்துள்ளார்.

இதையடுத்து கடந்த 31ம் தேதி பெயின்டில் கலக்கும் தின்னரை ஊற்றி தீ வைத்துள்ளார். அப்போது திடீரென வீடு முழுவதும் தீ பிடித்துள்ளது. இதில் அசன்பாட்ஷா, அவரது மனைவி, மகள் பாத்திமா ஆகிய மூன்று பேரும் தீயில் சிக்கியுள்ளனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டார் மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். இதில் சிறுமி பாத்திமா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் லேசான தீக்காயத்துடன் அசன்பாட்ஷா அவரது மனைவி உயிர் தப்பியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரையானை அழிக்க வைக்கப்பட்ட தீயில் 13 வயது சிறுமி ஒருவர் தீ பிடித்து எரிந்து உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Also Read: 4 ஆண்டுகள் பெண் தேடியும் திருமணம் நடக்காததால் விரக்தி.. வாலிபர் எடுத்த விபரீத முடிவு!