Tamilnadu

நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் வேகத்திற்கு கட்டுப்பாடு... ஒன்றிய அரசின் உத்தரவு ரத்து - ஐகோர்ட் அதிரடி!

கடந்த 2013ஆம் ஆண்டு காஞ்சிபுரம் சாலையில் நடந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த பெண் பல் மருத்துவர் ஒருவருக்கு, 90 சதவீத ஊனம் ஏற்பட்டது. அவருக்கான இழப்பீட்டு தொகையை 18 லட்சத்து 43 ஆயிரத்து 908 ரூபாயில் இருந்து,  1 கோடியே 49 லட்சத்து 80 ஆயிரத்து 548 ஆக உயர்த்தி வழங்க நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு  உத்தரவிட்டது.

மேலும், அந்த தீர்ப்பில், எக்ஸ்பிரஸ் சாலைகளில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்திலும், தேசிய நெடுஞ்சாலைகளில்  100 கிலோமீட்டர் வேகத்திலும் செல்லலாம் என்று ஒன்றிய அரசு 2018ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனவும், இருசக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டுமென உற்பத்தி நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

அதேபோல இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கும் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதை கட்டாயமாக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கை மீண்டும் விசாரித்த உயர்நீதிமன்றம், சாலை மேம்பாட்டையும், என்ஜின்களின் செயல்பாட்டை அதிகரிக்கவும் வேகம் அதிகரிக்கப்பட்டதாக ஒன்றிய அரசு கூறிய விளக்கத்தை ஏற்க மறுத்து, 2018ம் ஆண்டு ஒன்றிய அரசு பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட்டது.

மேலும், 2014ம் ஆண்டு அறிவிப்பின்படி, வாகனங்களுக்கு 60 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தை நிர்ணயிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டு அதன் அடிப்படையில் புதிய அறிவிப்பை வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Also Read: கீழடியும் திராவிட நாகரிகமும்..! : அமர்நாத் ராமகிருஷ்ணன் சென்னைக்கு மாற்றப்பட்டதற்கு ஏன் இத்தனை வரவேற்பு?