Tamilnadu

ஒரு மழைக்கே தாங்காத கட்டுமானம்; டெண்டரில் கொள்ளையடித்து கால்வாயில் கோட்டைவிட்ட அதிமுக அரசு!

வடிவேலு திரைப்பட பாணியில் கிணற்றை காணோம் என்பது போல் ஆரணியில் கால்வாய் காணவில்லை என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் புதிய கழிவு நீர் கால்வாய் கட்டும் பணி சுமார் 57 லட்சம் மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டு ஆரணியை சேர்ந்த இளங்கோவன் என்பவர் டெண்டர் எடுத்துள்ளார்.

மேலும் இந்த கழிவு நீர் கால்வாய் ஆரணி டவுன் 1வது வார்டில் உள்ள கே.கே.நகர், கே.சி.கே நகர், புதுகாமூர் ஆகிய பகுதியில் இருந்து பையூர் குளத்திற்கு கழிவு நீர் கால்வாய் இணைக்கும் பணி நடைபெற்று பணி முடிக்கபட்டன.

இந்நிலையில் ஆரணி டவுன் பழமை வாய்ந்த ஆலயமான ஸ்ரீ புத்திர காமேட்டீஸ்வரர் ஆலயம் பழைய ஆரணி எஸ்.வி.நகரம் சாலை அருகில் புதியதாக கட்டபட்ட கழிவு நீர் கால்வாய் நேற்று இரவு பெய்த கனமழையால் கால்வாய் அடித்து செல்லபட்டது.

இதில் பல இடங்களில் வெறும் சிமெண்ட கம்பிகள் பெயர்த்து எடுத்து வந்துள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் 4 மாதம் முன்பு புதியதாக கட்டப்பட்ட கால்வாய் மழையால் அடித்து செல்லப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உரைந்துள்ளனர்.

இன்னும் முழுமையாக பணி முடிந்து பயன்பாட்டிற்கு வராமலேயே ஒரு கனமழைக்கு கால்வாய் அடித்து செல்லப்பட்டதால் வடிவேலு பட பாணியில் கால்வாய் காணோம் என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.