Tamilnadu

“அமைச்சராக இருந்து என்ன செஞ்சீங்க”: திண்டுக்கல் சீனிவாசன் செல்லும் இடமெல்லாம் விரட்டியடிக்கும் பொதுமக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தி.மு.க உள்ளிட்ட கட்சிகள், தேர்தல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றன.

அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கூட்டணி கட்சிகளுக்குள் நிலவும் தொகுதி பங்கீடு குழப்பம் காரணமாக அ.தி.மு.க தொண்டர்கள் பலரும், பா.ஜ.க வேண்டாம் என்றும், அ.தி.மு.க வேட்பாளர்களை மாற்றவேண்டும் எனவும் கோரிக்கை வைத்து தமிழகத்தின் பல்வேறு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் தமிழக மக்களுக்கு எந்தவொரு நல்ல திட்டத்தையும் செய்யாமல் எப்படி ஓட்டுக் கேட்டு வரலாம் என அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை பல இடங்களில் மக்கள் விரட்டி அடித்து வருகின்றனர்.

அந்தவகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை எனக்கூறி பிரச்சாரத்திற்கு வருகைதந்த வனத்துறை அமைச்சரும் அ.தி.மு.க வேட்பாளருமான சீனிவாசனிடம் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் 2வது முறையாக அ.தி.மு.க சார்பில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் போட்டியிடுகிறார். நேற்று முதல் திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில், இன்று தாடிக்கொம்பு சாலையில் உள்ள 1வது வார்டுக்கு உட்பட்ட பாலதிருப்பதி பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வருகை தந்தார். அப்போது அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சாலை வசதி, கழிவுநீர் ஓடை, குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து உடனடியாக சீனிவாசன் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். இதனையடுத்து அங்கிருந்த அ.தி.மு.கவினர் பெண்களை சமாதானம் செய்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “கடந்த சட்டமன்ற தேர்தலின்போது வாக்குகள் கேட்க வந்த சீனிவாசன் இப்போதுதான் எங்களது பகுதிக்கு வாக்கு கேட்க வந்துள்ளார்” எனத் தெரிவித்தனர்.

மேலும் தங்களது பகுதியில் உள்ள பிரச்னைகளை கூறியபோது அதனை காதில் வாங்காமல் உள்ளே வந்து பார்வையிடாமல் சென்றுவிட்டதாக குற்றம்சாட்டினர். இதேபோல், அய்யன்குளம் பகுதியில் 40 வருடங்களுக்கு மேலாக வசித்து வரும் பொதுமக்களின் வீடுகளை காலி செய்ய சொல்லி அதிகாரிகள் கூறுவதாக கூறி, வனத்துறை அமைச்சர் சீனிவாசனை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

இதனையடுத்து அவர்களை சீனிவாசன் சமாதானம் செய்தார். இந்த முற்றுகைச் சம்பவங்கள் தொகுதி அ.தி.மு.கவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ‘இந்த அரிசியை மனுஷன் தின்பானா?’: தரமற்ற ரேஷன் அரிசியைக் கொண்டு அதிமுக வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்த பெண்கள்