Tamilnadu

“கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களின் முழு விவரத்தையும் இணையதளத்தில் வெளியிடுக” - ஐகோர்ட் கிளை ஆணை!

கோயில் சொத்துக்களின் ஆக்கிரமிப்பாளர் யார், சொத்து மூலம் கிடைக்கும் வருவாய் எவ்வளவு என்ற முழு விவரத்தையும் 10 மாதத்திற்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த ரமேஷ், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “கோயிலுக்கு சொந்தமான இடங்கள், கட்டண விவரங்களை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் பட்டியல் வெளியிடவும், பூஜை கட்டணங்கள், வாடகை விவரம், நன்கொடை, செலவினங்கள் ஆகியவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் உத்தரவிட வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர் விசாரித்தனர். அறநிலையத்துறை ஆணையர் தாக்கல் செய்த பதில் மனுவில், “கோயில் சொத்துக்களை கண்டறிய அடையாள குழுவும், பரிசீலனை குழுவும் அமைக்கப்பட்டுள்ளன. கோயில் நில குத்தகை மற்றும் வாடகைதாரர்கள், குடியிருப்போர், அனுபவத்தில் உள்ளோரிடம் இருந்து வரவேண்டிய ரூ.297.63 கோடி பாக்கியை கேட்டு 42,818 பேருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டதில், 14 ஆயிரத்து 26 பேரிடம் இருந்து ரூ.32.49 கோடி வசூலாகியுள்ளது” என கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதிகள், “கோயில் சொத்துக்களின் ஆக்கிரமிப்பாளர் யார், சொத்து மூலம் கிடைக்கும் வருவாய் எவ்வளவு உள்ளிட்ட முழு விவரத்தையும் 10 மாதத்திற்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும்” என உத்தரவிட்டனர்.

Also Read: “ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு புகார்- தி.மு.க ஆட்சியில் விசாரணை உறுதி” : மு.க.ஸ்டாலின் பேச்சு!