Tamilnadu

பல்லடம் அருகே வடமாநில பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை : தமிழகத்தில் கேள்விக்குறியாகும் பெண்கள் பாதுகாப்பு?

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் பிரெமோ ஜோதி தூரி ( 22 ). இவர் கணவனை பிரிந்து கோவையில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், பல்லடத்தை அடுத்த குங்குமம்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜேஸ்குமார் என்பவரிடம் வேலை எதாவது வாங்கி தரும்படி கூறியுள்ளார்.

வேலை வாங்கி தருவதாக நேரில வர சொன்னதை அடுத்து, கடந்த 28ம் தேதி பல்லடம் வந்துள்ளார் பிரெமோஜோதி. சில இடங்களுக்கு நேரில் சென்று வேலை இல்லை என கூறிய பிறகு, தன்னை மீண்டும் பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விடும்படி கூறியுள்ளார். ஆனால், ராஜேஷ்குமார் தன்னுடைய தம்பி ராஜூ உடன் செல்லுமாரு கூறிய பிறகு அவருடன் பிரெமோஜோதி சென்றுள்ளார்.

ஆனால், ராஜூ பேருந்து நிறுத்தம் செல்லாமல், உகாயனூர் அருகில் உள்ள பாறைக்குழிக்கு கூட்டி சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே இருந்த ராஜூவின் நண்பர்கள் தமிழ், தாமோதரன், அன்பு, கவின் ஆகிய 5 பேரும் சேர்ந்து பிரெமோஜோதியை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதனையடுத்து பல்லடம் மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று பிரெமோஜோதி புகார் கொடுத்ததை அடுத்து 6 பேர் மீதும் பல்லடம் மகளிர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது ராஜூ, அன்பு, கவின் ஆகிய 3 பேரையும் பல்லடம் மகளிர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள தமிழ், தாமோதரன், ராஜேஷ்குமார் ஆகிய 3 பேரையும் மகளிர் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் உத்தர பிரதேசத்தில் 19 வயதான தலித் பெண் ஒருவரை 3 பேர் சேர்ந்த கும்பல், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்தில் இந்த சம்பவம் மற்றுமொரு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்; தமிழகமும் உ.பி போல மாறாமல் இருக்க சட்டம் ஒழுங்கை மாநில அரசு முறையாக கடைபிடிக்க ஏற்பாடு செய்யவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Also Read: இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 87 பாலியல் வன்கொடுமை: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 7% அதிகரிப்பு- NCRB தகவல்!