Tamilnadu

உயிரை பணயம் வைத்து பணி செய்யும் தூய்மைப் பணியாளர்கள் : 2 மாதமாக சம்பளம் வழங்காத அரசை எதிர்த்து போராட்டம்!

உலகளவில் கொரோனா எனும் கொடிய வைரஸ் கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தங்கள் பணியைத் தொய்வில்லாமல் செய்து வருகின்றனர் தூய்மைப் பணியாளர்கள்.

மருத்துவர்களுக்கு அடுத்து நோய்க் கிருமிகளுடன் நேரடியாகப் போராடுவது இந்தத் தூய்மைப் பணியாளர்கள்தாம். தரமான முகக்கவசம், கையுறைகள் போன்றவை இல்லாமல் தூய்மைப் பணியாளர்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தூய்மைப் பணியாளர்களின் பற்றியும் கொஞ்சமும் அக்கறை இல்லாத அரசுதான் எடப்பாடி அரசு செயல்படுகிறது. துப்புரவுப் பணியாளர்களுக்குத் தூய்மைப் பணியாளர்கள் என்று பெயர் சூட்டினால் மட்டும் போதுமா? போதாது. அதனை விட கொடூரமாக, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தூய்மைப் பணியாளர்கள் சேவையைப் பாராட்டி அவர்கள் காலில் விழுந்து மரியாதை செய்கிறார்.

பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி வருகிறது. இந்நிலையில் தூய்மை பணியாளர்களுக்கு அரசு அறிவித்த சிறப்பு ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், இரண்டுமாதமாக நிருத்தி வைக்கப்பட்ட ஊதியத்தை வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் சிஐடியு ஊரக மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பாக பதாகைகளை ஏந்தியவாறு தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, கொரானா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களுக்கு இரண்டு மாதமாக சம்பளம் வரவில்லை; அதுமட்டுமல்லாது சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என அரசு அறிவித்தும் இன்னும் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டிய அவர்கள், அதனை உடனடியாக வழங்க வேண்டும்.

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி துறை பணியாளர்களுக்கு முழு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர்.

Also Read: தூய்மை பணியாளர்களுக்கு மலர் தூவி ‘டாட்டா’ காட்டிய இந்தியா - மாதம் 1,35,000 ரூபாய் ஊதியம் அறிவித்த கனடா!