Tamilnadu

“பாலில் நச்சுப்பொருள் என்பது பெரும் ஆபத்து; விரைந்து தீர்வுகாண வேண்டும்” : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

தமிழகத்தில் விநியோகிக்கப்படும் பாலில் அஃப்ளாடாக்ஸின் M1 எனும் நச்சுப் பொருள் அதிகளவில் உள்ளதாக மத்திய அரசின் அறிக்கை சமீபத்தில் வெளியான நிலையில், அதுகுறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மக்களவையில், பாலில் செய்யப்படும் கலப்படம் குறித்து தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி., கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே எழுத்துப்பூர்வமாக பதிலளித்திருந்தார்.

அதில், பாலில் நச்சுத்தன்மை அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தில் 551 பால் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் 88 பால் மாதிரிகளில் நச்சுத்தன்மை அதிகம் இருப்பது, உணவுக் கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணய ஆணையம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ள ட்விட்டரில் பதிவில், “பாலில் நச்சுத்தன்மை குறித்து தி.மு.க எம்.பி., டி.ஆர்.பாலு எழுப்பிய கேள்விக்கு, கல்லீரல் புற்றுநோய்க்கு காரணமான அஃப்ளாடாக்ஸின் M1 நச்சுப்பொருள் மாட்டுத் தீவனம் மூலம் பாலில் கலந்திருப்பதாகவும், இதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்திருப்பது பேரதிர்ச்சியளிக்கிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான உணவாகவும், விவசாயிகள் முதல் வணிகர்கள் வரை பலருக்கும் அடிப்படைப் பொருளாதார பலமாகவும் உள்ள பாலில் நச்சுத்தன்மை என்பது பெரும் ஆபத்து. இதன் உண்மைத் தன்மையை உணர்ந்து முதல்வர் தீவிர கவனம் செலுத்தி, நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: ‘உயிர்க்கொல்லி பால்’ பயன்பாட்டில் தமிழகம் முதலிடம் : - அஃப்ளாடாக்ஸின் M1 என்றால் என்ன தெரியுமா?